பீகாரில் மாவோயிஸ்டுகள் அட்டகாசம்.. அதிரடித் தாக்குதலில் 10 சிஆர்பிஎப் வீரர்கள் பலி
பாட்னா: பிகார் மாநிலத்தில் பாதுகாப்பு படையினருக்கும், மாவோயிஸ்களுக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் சிஆர்பிஎஃப் வீரர்கள்10 பேர் வீரமரணம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள சக்கர்பந்தா வனப்பகுதியில் மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததன் பேரில் சிஆர்பிஎஃப் படையினர் திங்கள்கிழமை இரவு அங்கு சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சிஆர்பிஎஃப் படையினரை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு சிஆர்பிஎஃப் வீரர்களும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த மோதலில் 3 மாவோயிஸ்டுகள் உயிரிழந்தனர். சிஆர்பிஎஃப் படை வீரர்கள் பலரும் படுகாயமடைந்தனர்.
Gaya(Bihar): Encounter between Naxalites and Cobra battalion takes place near the border of Imamganj and Aurangabad police station
— ANI (@ANI_news) July 18, 2016
இமாம்கஞ் - அவுரங்காபாத் காவல் நிலைய எல்லைக்கு அருகில் சிஆர்பிஃப் வீரர்களுக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே கடுமையான சண்டை நீடித்தது.
இந்த சண்டையில் சிக்கி சிஆர்பிஎஃப் வீரர்கள் 8 பேர் வீரமரணம் அடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவித்தன. மேலும், சிலர் படுகாயமடைந்துள்ளதகாவும் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்ட நிலையில் மேலும் 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்ததாகவும் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்தத் தாக்குதல் சம்பவத்தில் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது. காயமடைந்த வீரர்கள் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட நக்சல்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.