கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்லலாம்... ஆனால் 10 நாள்தான் பர்மிஷன்.. சுப்ரீம்கோர்ட்!
கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
டெல்லி: கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
ப.சிதம்பரம் மத்திய மந்திரியாக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டு முதலீடுகளை பெறுவதற்கு அன்னிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் வழங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ப.சிதம்பரம் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
35 நாள் பயணம்
இந்நிலையில் 35 நாள் பயணமாக வெளிநாடு செல்ல கார்த்தி சிதம்பரம் அனுமதி கோரியுள்ளார். அவரது இந்த பயணம் நவம்பர் மாதம் இறுதியில் தான் முடியும் என்பதால் ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கு விசாரணையில் தாமதம் ஏற்படும்.
பிரமாணப்பத்திரம்
இந்நிலையில் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கின் விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் ஒத்துழைக்கவில்லை. அவர் வெளிநாடு செல்ல இனிமேல் அனுமதிக்கக் கூடாது என உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது.
கார்த்தி சிதம்பரம் கோரிக்கை
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமது மகளை கல்வி நிறுவனத்தில் சேர்க்க வெளிநாடு செல்ல வேண்டும் என கார்த்தி சிதம்பரம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
10 நாள் பர்மிஷன்
இதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி அளித்துள்ளது. செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.