ஜன.1-ம் தேதி முதல் மெட்ரோ ரெயில் நிலையங்களில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை அறிமுகம்
டெல்லி மெட்ரோ ரெயில் நிலையங்களில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
டெல்லி: டெல்லியில் உள்ள 10 மெட்ரோ ரயில் நிலையங்களில் வரும் ஜனவரி மாதம் 1-ம் தேதி முதல் ரொக்கமில்லா பண பரிவர்த்தனை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 8-ந் தேதி ரூ500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். அந்த பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டிசம்பர் 31-ந் தேதி வரை கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகும் அந்த ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள் ரிசர்வ் வங்கியில் மார்ச் மாதம் வரை கொடுத்து மாற்றலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரொக்கமில்லா பண பரிவர்த்தனை மாற வேண்டும் என மத்திய அரசு ஊக்குவிதித்து வருகிறது. கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையை தொடர்ந்து, ரொக்க பணமில்லா மின்னணு பரிமாற்ற முறையை அனைத்து தரப்பினரும் பயன்படுத்துமாறு பிரதமர் நரேந்திர மோடியும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதை ஊக்குவிக்கும் வகையில் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஜனவரி 1-ம் தேதி முதல் டெல்லியில் மெட்ரோ ரயில் நிலையங்கள் ரொக்கமில்லா பரிவர்த்தனைக்கு மாறுகிறது. டெல்லியில் உள்ள ரோகினி கிழக்கு, ரோகினி மேற்கு ரயில் நிலையங்கள், எம்ஜி ரயில் நிலையம், மயூர் விகாஸ், நிர்மன் விகர், திலக் நகர், ஜானக்புரி மேற்கு, நொய்டா செக்டார் - 15, நேரு பிளேஸ், கைலாஸ் காலனி ரயில் நிலையங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.