பனிச்சரிவில் சிக்கிய 10 மெட்ராஸ் ரெஜிமெண்ட் வீரர்களும் பலி- பிரதமர் மோடி இரங்கல்
ஸ்ரீநகர்: உலகின் உயரமான போர்முனையான இமயமலையின் சியாச்சின் பகுதியில் பனிச்சரிவில் சிக்கி மாயமான 10 மெட்ராஸ் ரெஜிமெண்ட் பிரிவு ராணுவ வீரர்களும் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி பலியான வீரர்களுக்கு தமது வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் மோடி தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இமயமலையின் சியாச்சின் சிகரப் பகுதியில் 1984ஆம் ஆண்டு முதல் இந்திய ராணுவத்தினர் முகாமிட்டு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது சுமார் 20,000 அடி உயரத்தில் உள்ள பகுதி. இங்கு பகலிலேயே மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் உறைபனி வெப்பநிலை இருக்கும். இவ்வளவு மோசமான வானிலை உள்ள போதும் பாகிஸ்தான் ஆக்கிரமிக்கக் கூடும் என்ற அச்சத்தால் அங்கு இந்திய ராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் ராணுவ வீரர்களின் பங்கர் ஒன்றின் மீது பனிப்பாறை குன்று அப்படியே திடீரென சரிந்து விழுந்து மூடியது. இந்த பங்கரில் ஒரு அதிகாரி மற்றும் 9 ராணுவ வீரர்கள் இருந்தனர். இந்தியா- பாகிஸ்தான் - சீனா எல்லைகள் சந்திக்கும் இடத்தின் வட பகுதியில் இத்துயர சம்பவம் நிகழ்ந்தது.
இதனைத் தொடர்ந்து ராணுவம் மற்றும் விமானப்படையினர் அங்கு மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஆனால் நேரம் செல்ல செல்ல மைனஸ் 40 டிகிரி செல்சியஸ் அளவுக்கு உறைபனி வெப்பநிலை போனது... இதனால் மீட்புப் பணிகளைத் தொடர்ந்து அவர்களால் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
பின்னர் இன்றும் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இன்றைய மீட்பு பணி குறித்து பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் எஸ்.டி. கோஸ்வாமி கூறுகையில், 2-வது நாளாக இன்றும் ராணுவம், விமானப் படையினர் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
லே பகுதியில் சிறப்பு தளவாடங்கள் மூலம் தேடுதல் நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. அப்பகுதியில் இரவு நேரத்தில் வெப்பநிலை மைனஸ் 42 டிகிரி; பகலில் 25 டிகிரியாக இருக்கிறது.
இவ்வளவு மிக கடுமையான காலநிலையிலும் மீட்புக் குழுவினர் முழு வீச்சுடன் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு பனிச்சரிவில் சிக்கிய ராணுவ வீரர்கள் உயிருடன் ஏதேனும் ஒரு பகுதியில் சிக்கி உள்ளனரா என தேடினர் என்றார்.
மீட்புக் குழுவினரைப் பொறுத்தவரையில் 10 ராணுவ வீரர்களும் உயிரோடு இருப்பதற்கான வாய்ப்புகள் மிக குறைவு என்றே கூறிவந்தனர்.
பனிச்சரிவில் சிக்கிய 10 பேரும் மெட்ராஸ் ரெஜிமெண்ட் படைப் பிரிவைச் சேர்ந்தவர்கள். இவ்வளவு மோசமான பனிச்சரிவில் சிக்கிய 10 பேரும் இன்னமும் உயிருடன் இருப்பதற்கான சாத்தியங்கள் குறைவு; ஆகையால் 10 ராணுவ வீரர்களுமே பலியாகி இருக்கலாம் என்பதே ராணுவத்தரப்பின் அச்சமாக கூறப்பட்டு வந்தது.
வடக்கு கமாண்டோ படையின் தளபதி லெப். ஜெனரல் டி.எஸ். ஹூடா கூறுகையில், இது மிகவும் துயரமான நிகழ்வு... எல்லைப் பகுதியில் தீரமுடன் காவல்காக்கும் ராணுவத்தினருக்கு சல்யூட் செய்வோம் என்றார்.
நமது ஒன் இந்தியாவிடம் பேசிய ராணுவ அதிகாரிகள், மிக மோசமான வானிலை இருந்தாலும் மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.. இது மிகவும் துயரமான நாள் எங்களுக்கு.. தேடுதல் நடவடிக்கை நீடிக்கிறது என்றும் கூறியிருந்தனர்.
பிரதமர் மோடி அறிவிப்பு
இந்நிலையில் இன்று இரவு பிரதமர் மோடி தமது ட்விட்டர் பக்கத்தில் 10 ராணுவ வீரர்களும் உயிரிழந்துவிட்டதை உறுதிப்படுத்தி பதிவிட்டிருந்தார்.
Demise of soldiers in Siachen is very tragic. I salute the brave soldiers who gave their lives to the nation. Condolences to their families.
— Narendra Modi (@narendramodi) February 4, 2016
அதில் சியாச்சின் பனிச்சரிவில் நமது வீரர்கள் உயிரிழந்துவிட்டனர். தங்களுடைய உயிரை நாட்டுக்காக ஈந்த வீரர்களுக்கு என் வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன். வீரர்களை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
Heartfelt condolences to the near and dear ones of our brave soldiers martyred in the line of duty in the most difficult terrain of Siachen.
— Manohar Parrikar (@manoharparrikar) February 4, 2016
இதேபோல் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரும் தமது ட்விட்டர் பக்கத்தில் சியாச்சின் பனிச்சரிவில் உயிரிழந்த நமது வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம் எனத் தெரிவித்துள்ளார்.