சியாச்சின் சிகரத்தை உலுக்கிய பனிச்சரிவு... 10 ராணுவ வீரர்கள் மாயம்
லடாக்: இமயமலையின் சியாச்சின் மலைச் சிகரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 10 ராணுவ வீரர்கள் மாயமான சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பனிச்சரிவுக்குள் சிக்கிக்கொண்டவர்களை மீட்கும் பணியில் விமானப்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சியாச்சின் பனிச் சிகரத்தின் தெற்கு பகுதியில் ராணுவம் வழக்கமான ரோந்துப் பணியில் 10க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட பனிச் சரிவில் ராணுவ வீரர்கள் புதையுண்டதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சியாச்சின் பகுதி உலகிலேயே உயரமான போர் பகுதியாகும். இங்கு மைனஸ் 60 டிகிரி செல்சியல் வெப்பநிலை நிலவும். அவலாஞ்சி பகுதியில் அடிக்கடி பனிச்சரிவுகள் ஏற்படும். இன்று காலையில் சியாச்சின் மலை பகுதியில் நிகழ்ந்த திடீர் பனிச்சரிவில், 10 பாதுகாப்புபடை வீரர்கள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் விமானப்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த மாதம் நடந்த பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் பலியாகினர். கடந்த ஆண்டு இறுதியில் வாகனத்தில் சென்ற ராணுவ வீரர்கள் பனிச்சரிவில் புதையுண்டனர். கடந்த 1984ம் ஆண்டு முதல் இந்த பகுதியில் 8000 ராணுவ வீரர்கள் வரை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். பனிச்சரிவு மட்டுமல்லாது, மாரடைப்பு, நோய் பாதிப்பு, விலங்குகள் கடித்தோ, விஷ ஜந்துகள் தாக்கியோ ஏராளமான ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான கார்கில் போரில் சியாச்சின் பனிமலைப் பகுதி மிகவும் முக்கியமான இடமாக கருதப்பட்டது. அப்போது இந்த பகுதியில் 3ஆயிரத்துக்கும் அதிகமான வீரர்களை பாகிஸ்தான் குவித்துவைத்திருந்தது. இருநாட்டுக்கிடையே ஏற்பட்ட போர் நிறுத்ததை தொடர்ந்து சியாச்சின்பகுதியில் படைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.