யூரி தாக்குதல் எதிரொலி: ராணுவ அதிரடித் தாக்குதலில் 10 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் யூரி செக்டாரில் உள்ள லச்சிபுராவில் 10 தீவிரவாதிகளை இந்திய ராணுவத்தார் சுட்டுக் கொன்றனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் யூரி செக்டாரில் உள்ள ராணுவ நிர்வாகத் தலைமையகத்திற்குள் புகுந்து 4 தீவிரவாதிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தினர். இந்திய ராணுவத்தினர் அந்த 4 தீவிரவாதிகளையும் சுட்டுக் கொன்றுவிட்டனர்.
இருப்பினும் இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 18 பேர் வீர மரணம் அடைந்தனர். இதையடுத்து யூரி செக்டாரில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளை தேடும் பணி தீவிரமாக நடந்து வந்தது.
இந்த சூழலில் இன்று பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 15 தீவிரவாதிகளில் 10 பேரை யூரி செக்டாரில் உள்ள லச்சிபுராவில் வைத்து ராணுவத்தார் சுட்டுக் கொன்றுள்ளனர். மீதமுள்ள 5 பேரை ராணுவத்தினர் தேடி வருகின்றனர்.
இது யூரி தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. யூரி தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்ததுடன் அதற்கு பின்னணியில் இருப்பவர்கள் தண்டனையில் இருந்து தப்ப முடியாது என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.