மோடி அரசின் முதல் ரயில்வே பட்ஜெட்.. கவனிக்க வேண்டிய 11 முக்கிய அம்சங்கள்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் முதல் ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தனது முதல் ரயில்வே பட்ஜெட்டை செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. பட்ஜெட்டை மத்திய ரயில்வே துறை அமைச்சர் சதானந்த கவுடா தாக்கல் செய்தார்.
2014ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டின் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம்.
எஃப்.டி.ஐ.
ரயில்வே துறையில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அமைச்சரவையிடம் ஒப்புதம் கோர உள்ளது ரயில்வே துறை. பல புதிய திட்டங்கள் அரசு மற்றும் தனியார் கூட்டணியில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
வேகம்
ஒன்பது குறிப்பிடப்பட்ட வழித்தடங்களில் ரயில்களின் வேகம் மணிக்கு 160 கிலோ மீட்டரில் இருந்து 200 கிலோ மீட்டராக அதிகரிக்கப்பட உள்ளது.
புல்லட் ரயில்
மும்பை-அகமதாபாத் இடையே புல்லட் ரயில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த வழித்தடத்தில் தற்போது சதாப்தி எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது. இதன் பயண நேரம் 7 மணிநேரம் ஆகும். புல்லட் ரயில் வந்தால் பயண நேரம் வெறும் 2 மணிநேரம் தான்.
மேலும் ஒன்று
மைசூர்-பெங்களூர்-சென்னை, டெல்லி-ஆக்ரா, டெல்லி-சன்டிகர், மும்பை-கோவா ஆகிய வழித்தடங்களிலும் புல்லட் ரயில் இயக்க ரயில்வே துறையிடம் திட்டம் உள்ளது.
அதிவேக ரயில்கள்
அதிவேக ரயில்களை இயக்க ரூ.100 கோடி ஒதுக்கப்படும் என்று கவுடா அறிவித்துள்ளார்.
ஆன்லைன்
ரூ.25 லட்சத்திற்கு பொருட்கள் வாங்கினால் அவை கண்டிப்பாக ஆன்லைன் மூலம் வாங்க வேண்டும்.
முதலீடு, செலவு
2014 மற்றும் 2015ம் ஆண்டுகளில் ரயில்வவே துறையில் ரூ. 65 ஆயிரத்து 450 கோடி செலவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அரசு-தனியார் கூட்டணி மூலம் 2015ம் நிதியாண்டில் ரூ.6 ஆயிரத்து 5 கோடி முதலீடு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பு
ரயில்களில் பெண்கள் பெட்டியில் பாதுகாப்பை பலப்படுத்த 4 ஆயிரம் மத்திய ஆயுதப் படை பெண் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
ஒய்-ஃபை
அனைத்து ரயில் நிலையங்கள் மற்றும் குறிப்பிட்ட ரயில்களில் ஒய்-ஃபை வசதி செய்து கொடுக்கப்பட உள்ளது. நிமிடத்தில் 7 ஆயிரத்து 200 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய ஏதுவாக இ-டிக்கெட் முறை அறிமுகப்படுத்தபடுகிறது. தற்போது நிமிடத்திற்கு 2 ஆயிரம் டிக்கெட்டுகள் தான் முன்பதிவு செய்ய முடியும்.
புதிய ரயில்கள்
ரயில்வே பட்ஜெட்டில் 58 புதிய ரயில்கள் குறித்த அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தன.
உணவு
ஏற்கனவே சமைக்கப்பட்ட உணவுகளை பாக்கெட்டுகளில் அடைத்து விற்கும் திட்டமும் உள்ளது. சுத்தத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.