கோபத்தை கொட்டித் தீர்த்த ஃபனி.. 10 ஆயிரம் கிராமங்களில் ருத்ரதாண்டவம்.. துயரத்தில் ஒடிஸா மக்கள்
Recommended Video
புவனேஸ்வரம்: ஒடிஸா மாநிலத்தில் நேற்று கரையை கடந்த போது பலத்த காற்றுடன் மழை பெய்ததால் 10 ஆயிரம் கிராமங்கள் அடியோடு பாதிக்கப்பட்டன.
வங்கக் கடலில் உருவான ஃபனி புயல் தமிழகத்தை தாக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் தமிழகத்துக்கு ரெட் அலர்ட் எல்லாம் விடுக்கப்பட்டது. எனினும் புயலில் ஒரு டுவிஸ்டாக இந்த புயல் மெல்ல நகர்ந்து ஒடிஸாவை நெருங்கியது.
இதையடுத்து அந்த மாநிலத்துக்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று புரி அருகே கோபால்பூர்-சந்த்பாலி இடையே ஃபனி கரையை கடந்தது. அப்போது மணிக்கு 175 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது.
பொதுமக்கள் பாதிப்பு
இந்த பேய்க் காற்றால் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. பல்லாயிரக்கணக்கான மின் கம்பங்கள் விழுந்தன. இதனால் மின் விநியோகம் பாதித்தது. வீடுகள் இருளில் மூழ்கின. 147 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் பொதுமக்கள் ரயில் நிலையங்களில் குழுமியிருந்தனர். நேற்று முன் தினம் முதலே விமான சேவையும் ரத்து செய்யப்பட்டது.
விலங்குகள் சரணாலயம்
இதனால் 14 மாவட்டங்கள் பெரும் சேதமடைந்தன. வீடுகளின் மேற்கூரைகள், பெயர் பலகைகள் பெயர்ந்து சென்றன. இந்த ஃபனி விலங்குகள் ,பறவைகளையும் விட்டு வைக்கவில்லை. பறவைகள் சரணாலயம், விலங்குகள் சரணாலயம் ஆகியவை சின்னாபின்னமாகின.
மரணம்
புரி மாவட்டத்தில் ஒரு இளைஞர் மரம் விழுந்து பலி ஆனார். நயகார் மாவட்டத்தில் ஒரு பெண் தண்ணீர் எடுக்கச்சென்றபோது பறந்து வந்த வீட்டின் கூரை விழுந்து உயிரிழந்தார். கேந்திரப்பாரா மாவட்டத்தில் 65 வயதான மூதாட்டி புயல் நிவாரண தங்கும் இடத்தில் இருந்தபோது மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
ருத்ரதாண்டவம்
கஜபதி, கஞ்சம், குர்தா, பூரி, நய்கார், கட்டாக், ஜெகத்சிங்பூர், கேந்திரப்பாரா, ஜாஜ்பூர், பாத்ராக், பாலசோர், மயூர்பாஞ்ச், தேன்கனாய், கியோன்ஜார் நகரங்கள் பெரும் பாதிப்பை சந்தித்தன. இந்த நகரங்கள் அனைத்தும் வெள்ளத்தின் பிடியில் சிக்கின. குறிப்பாக 9 மாவட்டங்களில் 10 ஆயிரம் கிராமங்களிலும், 52 நகரங்களிலும் ஃபனி புயல் ருத்ரதாண்டவமாடி விட்டது.