பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுமியின் 32 வார கருவை கலைக்க உச்சநீதிமன்றம் அனுமதி மறுப்பு!
டெல்லி: பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுமியின் 32 வார கர்ப்பத்தை கலைக்க உச்சநீதிமன்றம் அனுமதி மறுத்துவிட்டது.
சண்டிகாரில் பாலியல் பலாத்காரத்தினால் பாதிக்கப்பட்ட சிறுமியின் வயிற்றில் வளரும் கருவை கலைப்பதற்கு கடந்த ஜூலை 18ம் தேதி மாவட்ட நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனையத்து சிறுமி சார்பில், அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இம்மனு தொடர்பாக கடந்த 24ம் தேதி விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், பாதிக்கப்பட்ட சிறுமியை பரிசோதனை செய்து ஜூலை 26ம் தேதிக்குள் மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அதன்படி மருத்துவ அறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
மருத்துவ அறிக்கை
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சிறுமியின் கருவை கலைக்க கோரிய மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது. கருவை கலைப்பது என்பது பாதிக்கப்பட்ட சிறுமிக்கும், வயிற்றில் வளரும் குழந்தைக்கும் நல்லது அல்ல என சிறுமி குறித்து தாக்கல் செய்யப்பட்ட மருத்துவ அறிக்கையை மேற்கொள்காட்டி உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
உறவுக்காரர் சீரழிப்பு
இந்தியாவிலுள்ள சட்டப்படி அதிகபட்சமாக 20 வார காலம் வரையிலான கருவைதான் கலைக்க முடியும் என்பதால் நீதிமன்றத்தை சிறுமி தரப்பு அணுகியிருந்தது. உறவுக்காரர் தொடர்ந்து சீரழிந்ததால் அந்தசிறுமி கருவுற்றிருந்தார்.
சிகிச்சையில் திருப்தி
சிறுமி சார்பில் ஆஜரான வழக்கறிஞரோ, இந்த சிறு வயதில் முழு அளவுக்கான கருவை தாங்கும் சக்தி அந்த சிறுமிக்கு இல்லை என வாதம் முன்வைத்தபோதும், மருத்துவர்கள் சிறுமிக்கு அளித்துவரும் சிகிச்சையை அடிப்படையாக வைத்து, பாதுகாப்புக்கு உறுதியளித்ததால் உச்சநீதிமன்றம் இந்த முடிவுக்கு வந்துள்ளது.
வழிகாட்ட உத்தரவு
அதேநேரம், கருக்கலைப்பு குறித்து வழிமுறைகளை உருவாக்க மாநிலங்களுக்கு ஆலோசனை வழங்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.