பெங்களூரில் பெண் ஐடி ஊழியர்களுக்கு பாதுகாப்பில்லையே... பிரதீபா வடு ஆறும் முன் மற்றொரு சம்பவம்!
பெங்களூர்: இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப தலைநகரான பெங்களூரில் பணியாற்றும் ஐடி ஊழியர்களுக்கு பேரதிர்ச்சி அளித்த ஒரு சம்பவம் உண்டு என்றால், அது, கால்சென்டர் ஊழியரான பிரதீபா என்பவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதுதான். அவர் வேலை பார்த்த நிறுவனத்தில் டிரைவராலேயே இந்த சம்பவம் நடந்தேறியது. இதன்பிறகுதான் இந்தியா முழுவதும் ஐடி ஊழியர்களுக்கான பாதுகாப்பு நெறிமுறைகள் அதிகரிக்கப்பட்டன.
பிற ஊழியர்களுக்கும் ஐடி ஊழியர்களுக்கும் ஒரு பெரிய வித்தியாசம் என்னவென்றால், இதில் குறிப்பிட்ட பகுதியினர் இரவு நேரத்திலும் அலுவலகம் சென்று வேலை பார்க்க வேண்டிய நிலையில் உள்ளனர். கால்சென்டர், பிபிஓ என ஐடிதுறையின் ஒரு பெரும்பிரிவு இப்படி, இரவு பணியை நம்பியுள்ளது. அதில் கணிசமானோர் பெண் ஊழியர்கள் என்பதும் கவனிக்கப்பட வேண்டியது.
அப்படித்தான், 2005ம் ஆண்டில், இந்தியாவின் ஐடி தலைநகராக பெங்களூரும் மகுடம் சூட்டிக்கொண்டு ஜொலித்தது. எங்கு பார்க்கினும், ஐடி நிறுவனங்களும், கால்சென்டர்களும் புதிது, புதிதாக முளைத்தன. அதில் ஒன்றுதான் ஹெச்.பி.குளோபல். இந்த கால்சென்டரில் பணியாற்றியவர் 27 வயதான பிரதீபா. 2005ம் ஆண்டு, டிசம்பர் 13ம் தேதி, அதிகாலை 1 மணிக்கு இவர் வீட்டில் இருந்து பிக்-அப் செய்வதற்காக ஆபீஸ் அனுப்பி வைத்த வேன் வந்தது.
அந்த வேனின் டிரைவராக சிவகுமார் என்பவர் இருந்தார். பிரதீபாவின் அழகில் மயங்கிய சிவகுமார், அவர் மட்டுமே வேனில் வருவதை பயன்படுத்தி பெங்களூரில் அஞ்சனபுரா லே-அவுட் என்ற பகுதியில் வேனை நிறுத்தி உள்ளேயே பலாத்காரம் செய்து, கத்தியால் குத்தி கொலையும் செய்தார்.
பிரதீபாவின் உடல் பெங்களூரில் இருந்து 150 கி.மீ தொலைவிலுள்ள ஹாசன் மாவட்டம், சக்லேஷ்புரா அருகே இருந்து கண்டெடுக்கப்பட்டது. அவரது ஐடி கார்டு மூலம், போலீசார் விசாரணை நடத்தி படிப்படியாக சிவகுமாரை நெருங்கி கைது செய்தனர்.
இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்துதான் பிக்-அப் வாகனங்களுக்கும், டிரைவர்களுக்கும் ஐடி நிறுவனங்கள் கடும் கட்டுப்பாட்டை கொண்டு வந்தன. வழக்கின் முக்கியத்துவம் கருதி விரைவு நீதிமன்றம் அமைத்து விசாரணை நடத்தப்பட்டு, சிவகுமாருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில்தான், 10 ஆண்டுகள் கழித்து, தற்போது, மீண்டும் ஒரு ஐடி ஊழியர் மீதான பலாத்கார சம்பவம் பெங்களூரில் பதிவாகியுள்ளது. ஆனால், இதில் அலுவலக வேன் டிரைவர் சம்மந்தப்பட்டவில்லை என்பதுதான் வித்தியாசம். ஆனால், பிரதீபா வழக்கு போல இதற்கும் முக்கியத்துவம் கொடுக்காவிட்டால், ஐடி ஊழியர் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும்.