ஒபாமா மனைவிக்கு 100 பனாரஸ் பட்டுப் புடவைகள் பார்சல்... மோடி தரும் பரிசு!
டெல்லி: குடியரசுத் தினவிழாவிற்காக இந்தியா வரும் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷலுக்கு, பிரதமர் மோடி 100 பனாரஸ் பட்டுப் புடவைகளைப் பரிசளிக்க திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.
இந்தியாவில் வரும் 26ம் தேதி குடியரசு தின விழா நடைபெறுகிறது. டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் ஒபாமா கலந்து கொள்கிறார். இதற்காக வரும் 24ம் தேதி ஒபாமா குடும்பத்தினர் டெல்லி வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியா வரும் ஒபாமாவுக்கும் அவரது மனைவி மிஷேலுக்கும் பல்வேறு சிறப்பு பரிசுகளை வழங்க பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, ஒபாமாவுக்கு சால்வை மற்றும் துணிகளை மடித்து வைக்கக்கூடிய தீப்பெட்டி அளவில் உள்ள கைப்பையை பிரதமர் மோடி வழங்குகிறார். அதற்கான பணிகளை தெலங்கானா மாநிலத்தில் சிர்சிலா நகரை சேர்ந்த நல்லா விஜய் மேற்கொண்டு வருகிறார்.
இதேபோல், அவரது மனைவி மிஷலுக்கு பல்வேறு கலை வேலைப்பாடுகளுடன் கூடிய 100 பனாரஸ் புடவைகளை அன்பளிப்பாக வழங்க பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்தியப் பட்டுப் புடவை என்றால் மிஷலுக்கு உயிர் என்பது ஊரறிந்த ரகசியம் தான். ஏற்கனவே பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் புடவையுடன் தோன்றியுள்ளார். எனவே, அவருக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் கலைநயம் மிக்க 100 பனாரஸ் பட்டுப் புடவைகளை பரிசளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கு தேவையான பணிகள் வாரணாசியில் நடைபெற்று வருகிறது என்று வாரணாசி மாவட்ட மூத்த பாஜ தலைவர் தெரிவித்துள்ளார்.