லடாக்கில் சீனாவின் ஊடுருவலைத் தடுக்க 100 டாங்கிகள் நிறுத்தம்... எல்லையில் பதற்றம்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் லடாக்கில் சீனாவின் ஊடுருவலைத் தடுக்க 100 டாங்கிகள் நிறுத்தப்பட்டுள்ளதால் அங்கு பதற்றம் ஏற்பட்டு வருகிறது.
காஷ்மீரின் லடாக் சிகரத்தின் கிழக்கு பகுதி மற்றும் அருணாச்சல பிரதேசத்தின் சில பகுதிகளை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதனால் கடந்த 1962ம் ஆண்டு இந்தியா-சீனா யுத்தம் நிகழ்ந்தது.
இந்த போருக்கு பின் எல்லையில் பதற்றம் சற்று தணிந்தது. ஆனால் தொடர்ந்து சீனா ராணுவம் ஊடுருவுவது, உரிமை கோருவது என அத்துமீறி வருகிறது.
கடந்த ஜூன் மாதம் 9-ந் தேதி அருணாசல பிரதேசத்தில் நமது ராணுவத்தினருக்கும் சீன ராணுவத்தினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் லடாக்கில் ராணுவம் பலப்படுத்தப்பட்டுள்ளது.
சீனாவின் ஊடுருவலைத் தடுக்கும் வகையில் அதிநவீன டி72 ரக 100 ராணுவ டாங்கிகளை எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன. 50 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முறையாக லடாக்கில் பெருமளவு ராணுவம் குவிக்கப்பட்டிருப்பதால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.