பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் 100 சதவீத அந்நிய முதலீடு... 'மொத்தத்தையும் திறந்து விட்டாச்சு'!
டெல்லி: பாதுகாப்பு, விமானப் போக்குவரத்து, மருந்துத் தயாரிப்பு, உணவுப் பதப்படுத்துதல் ஆகிய துறைகளில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
ஒலிபரப்பு சாதனங்கள் சேவை, தனியார் பாதுகாவல் அமைப்புகள், கால்நடை பராமரிப்பு ஆகிய துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டுக்கான விதிமுறைகளையும் மத்திய அரசு தளர்த்தியுள்ளது.
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன.
விமானப் போக்குவரத்து
உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவையில் 49 சதவீதம் வரை மட்டுமே அன்னிய நேரடி முதலீட்டுக்கு இதுவரை அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அரசின் ஒப்புதலுடன் 100 சதவீதம் வரை விமானப் போக்குவரத்துத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புத் துறையிலும்
இதேபோல், பாதுகாப்புத் துறையில் தற்போது 49 சதவீதம் வரை அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இனிமேல், நவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தும்பட்சத்தில், 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு வழிவகை செய்யும் அளவில் விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன.
மருந்து தயாரிப்பு
இதேபோல், புதிய விதிமுறைகளின்படி, மருந்துப் பொருள்கள் தயாரிப்புத் துறையில், உள்நாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் 74 சதவீதம் வரை மத்திய அரசின் முன்அனுமதியின்றி வெளிநாட்டு நிறுவனங்கள் நேரடியாக முதலீடு செய்யலாம். அரசின் அனுமதிபெற்று 100 சதவீதம் வரையும் அன்னிய நிறுவனங்கள் நேரடி முதலீடு செய்யலாம்.
உணவு பதப்படுத்தல்
உணவுப் பதப்படுத்துதல் துறையை ஊக்குவிக்கும் வகையில், மின் வர்த்தக முறை உள்பட உணவுப் பொருள் வர்த்தகத்தில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி வழங்குவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அன்னிய நேரடி முதலீட்டுக்கான விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தி இருப்பது, இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பு, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அன்னிய நேரடி விதிமுறைகள் தளர்த்தப்பட்டன.
ஆப்பிள் நிறுவனத்துக்கு அனுமதி
அமெரிக்காவைச் சேர்ந்த ஆப்பிள் நிறுவனம், இந்தியாவில் சில்லறை விற்பனை மையத்தைத் தொடங்குவதற்கு அனுமதிக்கும் வகையில் விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன.
பங்குச் சந்தைகளில் முன்னேற்றம்
அன்னிய நேரடி முதலீட்டுக்கான விதிமுறைகள் தளர்த்தப்பட்டதை அடுத்து, திங்கள்கிழமை காலை வீழ்ச்சியுடன் காணப்பட்ட பங்குச் சந்தை, மாலையில் முன்னேற்றத்துடன் முடிவடைந்தது.
எதிர்ப்பு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும், ஆர்எஸ்எஸ் துணை அமைப்பான சுதேசி ஜாக்ரண் மஞ்ச் என்ற அமைப்பும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
காங்கிரஸ் நிலை
"பாதுகாப்புத் துறையில் 100% அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிப்பது, நாட்டின் பாதுகாப்புக்கும், சுதந்திரமான வெளியுறவுக் கொள்கைக்கும் எதிராக உருவாகியுள்ள மிகப்பெரிய அச்சுறுத்தல்" என முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
"ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் தாம் நீடிக்கப்போவதில்லை என்று ரகுராம் ராஜன் அறிவித்ததால், எஃப்டிஐ விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. ரகுராம் ராஜன் அறிவித்திருக்காவிட்டால், இந்த மாற்றம் நிகழ்ந்திருக்காது. எனினும், அன்னிய நேரடி முதலீடு மந்திரக்கோல் அல்ல," என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ்.