அனைவருக்கும் நன்றி, 11 நாட்கள் வெற்றிக் கொண்டாட்டம் நடைபெறும்: மமதா பானர்ஜி
கொல்கத்தா: சட்டசபை தேர்தல் வெற்றி 11 நாட்களுக்கு மாநிலம் முழுவதும் கொண்டாடப்படும் என்று மேற்கு வங்க மாநில முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் 294 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் 6 கட்டமாக நடத்தப்பட்டது. தேர்தலின்போது பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இதில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் 216 தொகுதிகளிலும், இடது சாரிகள் 31 தொகுதிகளிலும், காங்கிரஸ் 44 தொகுதிகளிலும், பாஜக 7 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.
திரிணாமூல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது. இந்நிலையில் இது குறித்து மேற்கு வங்க மாநில முதல்வர் மமதா பானர்ஜி கூறுகையில்,
எங்களை வெற்றி பெற செய்த அனைவருக்கும் நன்றி. வரும் 27ம் தேதி நான் மீண்டும் முதல்வராக பதவியேற்பேன். பல பிரச்சனைகளுக்கு இடையே தேர்தலை அமைதியாக நடத்திக் கொடுத்த தேர்தல் ஆணையத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளதால் தான் பொய் பிரச்சாரங்கள் எடுபடவில்லை. வெற்றிக் கொண்டாட்டம் மாநிலம் முழுவதும் 11 நாட்கள் நடைபெறும் என்றார்.