வீட்டில் பூஜை செய்ததற்காக 11 இந்தியர்களை நாடு கடத்திய குவைத்: என்ன கொடுமை இது?
பெங்களூர்: குவைத்தில் ஒரு அறையில் பூஜை நடத்தியதற்காக தக்ஷின் கன்னடா பகுதியைச் சேர்ந்த 11 பேரை குவைத் அரசு நாடு கடத்தியுள்ளது.
தக்ஷின் கன்னடாவைச் சேர்ந்த 11 பேர் குவைத்தில் பணியாற்றி வந்தனர். குவைத்தில் உள்ள நவசேதனா நல சங்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் சத்யநாராயண பூஜை நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு கடந்த அக்டோபர் மாதம் 16ம் தேதி ஒரு வீட்டு அறையில் 11 பேர் சேர்ந்து சத்யநாராயண பூஜை நடத்தியுள்ளனர்.
அதை பார்த்த யாரோ ஒருவர் 11 பேர் சேர்ந்து சூனியம் செய்கிறார்கள், தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்று குவைத் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளார். அதிகாரிகளும் அவரின் புகாரை நம்பி அந்த 11 பேரையும் கடந்த மாதம் நாடு கடத்திவிட்டனர்.
எந்த தவறும் செய்யாத தங்களை குவைத்திற்கு திருப்பி அனுப்பி வைக்க வேண்டும் என்று அவர்கள் மத்திய வெளியறவுத் துறை அமைச்சகத்திடம் கேட்டுள்ளனர். புரிதல் இல்லாமல் தான் அவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாலும், அவர்கள் மீது குவைத்தில் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்பதாலும் அவர்களை மீண்டும் அங்கு அனுப்பவதில் சிரமம் இருக்காது என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் கருதுகிறது.
இந்த விவகாரம் குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் குவைத் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. குவைத் அதிகாரிகள் சம்மதம் அளித்தால் தான் அந்த 11 பேரும் மீண்டும் அங்கு செல்ல முடியும்.
ஒரு பூஜை செய்ததற்காக 11 பேரை குவைத் நாடு கடத்தியுள்ளது மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. என்ன, ஏது என்று விசாரிக்காமல் இப்படியா 11 பேரின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்குவது?