ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்ந்த 11 இந்தியர்கள்
டெல்லி: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் 11 இந்தியர்கள் சேர்ந்துள்ளதாக உளவுத் துறை தகவல் தெரிவித்துள்ளது.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் பக்கம் இந்திய இளைஞர்கள் ஈர்க்கப்பட்டனர். இதை பார்த்த மத்திய அரசு அந்த அமைப்புக்கு இந்தியாவில் தடை விதித்தது. இந்நிலையில் ஈராக் மற்றும் சிரியாவில் அட்டகாசம் செய்யும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் 11 இந்தியர்கள் சேர்ந்துள்ளது உளவுத் துறை அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.
அதில் 6 பேர் வளைகுடா நாடுகளில் வசித்து வந்த இந்தியர்கள். மீதமுள்ளவர்கள் இந்தியாவில் வசித்தவர்கள். மகாராஷ்டிரா மாநிலம் கல்யாணைச் சேர்ந்த வாலிபர்கள் ஆரீப் மஜீத், அமன் நயீம் தன்டெல், பஹத் தன்விர் ஷேக், சாஹிம் பரூக் தான்கி ஆகியோர் தான் இங்கிருந்து ஈராக் சென்று ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் கடந்த ஆண்டு சேர்ந்தனர்.
மேலும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்து போராடுகையில் 5 இந்தியர்கள் பலியாகியுள்ளனர். ஈராக்கில் 6 மாதங்கள் இருந்துவிட்டு கடந்த ஆண்டு நாடு திரும்பிய மஜீத் மும்பையில் கைது செய்யப்பட்டார். ஆனால் ஈராக் சென்ற பிற வாலிபர்கள் எங்கு உள்ளனர் என்பது தெரியவில்லை.
ஐஎஸ்ஐஸ் அமைப்புக்கு தடை விதித்த பிறகு அதில் சேர விரும்பியவர்களை போலீசார் தேடிச் சென்று விசாரணை நடத்தினர். மேலும் சமூக வலைதளங்கள் மூலமாக யாரும் அந்த அமைப்பில் சேர்கிறார்களா என்பதையும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
போலீசாரின் அதிரடி நடிவடிக்கைகளால் கடந்த 6 மாதங்களில் எந்த ஒரு இந்தியரும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேரவில்லை.