மிஸோரம் மாநிலத்தில் பஸ் கவிழ்ந்து 2 கர்ப்பிணிகள் உள்பட 11 பேர் பலி
அய்ஸ்வால்: மிஸோரம் மாநிலத்தில் நேற்று நள்ளிரவு பேருந்து ஒன்று கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இரண்டு கர்ப்பிணிப் பெண்கள் உள்பட 11 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று நள்ளிரவு தலைநகர் அய்ஸ்வாலில் இருந்து லாங்ட்லாய் நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்த பேருந்து, ராம்லாய்டுயி என்ற கிராமத்துக்கு அருகே சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியது.
அப்போது, சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது. பேருந்தில் இருந்த பயணிகள் வெளியேற முடியாமல் பெரும் கூச்சலிட்டனர். இதனையடுத்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்துக்கு மீட்புப் படையினருடன் விரைந்து வந்தனர். அவர்கள் இரண்டு கர்ப்பிணிகள் உள்பட நான்கு பெண்கள் மற்றும் 7 ஆண்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், காயமடைந்த 21 பயணிகள் அருகிலுள்ள தென்ஸால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் போலீசார், இவ்விபத்து பேருந்து ஓட்டுனரின் தூக்கக் கலக்கத்தால் ஏற்பட்டதா அல்லது. குடிபோதையில் வாகனம் ஓட்டினாரா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.