11 நிமிடங்கள் துண்டிக்கப்பட்ட தகவல் தொடர்பு... மோதலில் இருந்து தப்பிய 3 விமானங்கள்
கொல்கத்தா : 11 நிமிடங்கள் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதையடுத்து, விமானிகளின் சாதுர்யத்தால் 3 விமானங்கள் மோதலில் இருந்து தப்பின.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று டெல்லியில் இருந்து வந்த ஜெட் ஏர்வேஸ் விமானம் 8000 அடி உயரத்திலும், அந்தமானின் போர்ட் ப்ளேரில் இருந்து வந்த மற்றொரு ஜெட் விமானம் 7000 அடி உயரத்திலும், ஒரே நேரத்தில் தரையிறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
அப்போது டெல்லி-கோவா விமானம் புறப்பட்டதால், விமான வான் தொலைதொடர்புத் துறைக்கும், விமான பைலட்டுகளுக்கும் இடையே கிடைக்க வேண்டிய சிக்னலில் கோளாறு ஏற்பட்டது. இதனால் நேற்று காலை 9:17 மணி முதல் 9:28 வரை என 11 நிமிடங்கள் ஏற்பட்ட குழப்பத்தால் மூன்று விமானங்கள் மோதவிருந்தன. உரிய நேரத்தில் கோளாறு சரி செய்யப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
கொல்கத்தா வான்வெளி பகுதியில் 3 விமானங்கள் அருகருகே பறந்ததால் விமானிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாயினர். விமானிகளின் சாதூர்யத்தால் விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இந்த தகவல் துண்டிப்பு 11 நிமிடங்கள் நீடித்தது. இதனால் 3 விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதும் நிலை ஏற்பட்டது. விமானிகளின் சாதுர்யத்தால் இந்த விபத்து தவிர்க்கபட்டது.
தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது குறித்து விமான போக்குவரத்து இயக்குநரகம் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.