3வது அணி:முலாயம், நிதிஷ், பிரகாஷ் காரத் உட்பட 11 கட்சித் தலைவர்கள் டெல்லியில் ஆலோசனை!!
டெல்லி: டெல்லியில் 11 கட்சிகள் பங்கேற்ற 3வது அணியின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 3வது அணியின் பொதுசெயல் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.
லோக்சபா தேர்தலில் காங்கிரஸ், பாஜகவுக்கு மாற்றாக 3 வது அணியை இடதுசாரிகள் முன்னெடுத்து உருவாக்கி உள்ளனர். இதில் அதிமுக, சமாஜ்வாடி கட்சி, ஐக்கிய ஜனதா தளம், இடதுசாரிக் கட்சிகள் என 11 கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இக்கட்சிகளின் எம்.பிக்களின் நாடாளுமன்றத்தில் ஒருங்கிணைந்து செயல்பட்டனர். இந்த நிலையில் இன்று டெல்லியில் இக்கட்சியின் மூத்த தலைவர்கள் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினர். இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் 3வது அணியின் பொதுசெயல் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.
இன்றைய கூட்டத்தில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ், மார்க்சிஸ்ட் கட்சியின் சீத்தாரம் யெச்சூரி, முன்னாள் பிரதமர் தேவகவுடா, ஐக்கிய ஜனதா தளத் தலைவர்கள் நிதிஷ்குமார், சரத் யாதவ், அதிமுகவின் தம்பிதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ் காரத், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை வீழ்த்த ஓரணியில் 11 கட்சிகளும் இணைந்து செயல்படும். காங்கிரஸ் மற்றும் பாஜகவின் கொள்கைகள் ஒன்றுதான். நாங்கள் நாட்டில் மூன்றாவது அணியை உருவாக்குவோம். யார் பிரதமர் வேட்பாளர் என்பதை லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் முடிவு செய்வோம் என்றார்.
பாஜகவும் காங்கிரசும் ஒன்றுதான்
தொடர்ந்து பேசிய காரத், காங்கிரஸ் கட்சியை ஒத்தக் கொள்கையை உடையதுதான் பாஜக என்று குறிப்பிட்ட அவர், ஒரு நாணயத்தின் இன்னொரு பக்கம்தான் பாஜக என்றும், நாட்டுக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய வகுப்புவாத அரசியல்களின் பிரதிநிதியாக பாஜக விளங்குகிறது என்றும் சாடினார்.
மதசார்பற்ற கட்சிகள்
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் பாஜகவுக்கு மாற்றாகவே 11 கட்சிகள் கொண்ட இக்கூட்டணி அமையும் என்றும் காரத் குறிப்பிட்டார். மேலும், தங்களுடன் மதசார்பற்றக் கட்சிகள் இணையலாம் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
முலாயம் சிங் யாதவ்
சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் கூறும்போது, "இந்த மூன்றாவது மாற்று அணி மேலும் விரிவடையலாம். இன்று 11 கட்சிகள் உள்ள இந்த அணியில், பின்னாளில் 15 கட்சிகள் இடம்பெறக் கூடும்" என்றார்.
நிதிஷ்குமார்
மூன்றாவது அணி முயற்சி தோல்வியைத் தழுவினால், மீண்டும் பாஜகவுடன் இணைய வாய்ப்புள்ளதா என்று ஐக்கிய ஜனதா தளம் தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ் குமாரிடம் கேட்டதற்கு, அதற்கு வாய்ப்பு இல்லை என்று தெரிவித்தார்.