பாஜக, காங். உட்பட 11 கட்சிகள் நாகலாந்து சட்டசபை தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு- மத்திய அரசு 'ஷாக்'
நாகாலாந்து சட்டசபை தேர்தலை புறக்கணிப்பதாக 11 அரசியல் கட்சிகள் அறிவித்துள்ளன.
கோஹிமா: நாகாலாந்து தனிநாடு கோரும் பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தி சட்டசபை தேர்தலை புறக்கணிக்கப்போவதாக பாஜக, காங்கிரஸ் உட்பட 11 கட்சிகள் திடீரென அறிவித்திருப்பது மத்திய அரசை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
நாகாலாந்து சட்டசபை தேர்தல் பிப்ரவரி 27-ந் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. நாகாலாந்தில் ஆளும் நாகா மக்கள் முன்னணி- பாஜக கூட்டணி ஆட்சியை தக்க வைக்க முயற்சிக்கிறது. மாநில கட்சிகளுடன் ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸும் தீவிரம் காட்டுகிறது.
இந்நிலையில் நாகா இனமக்களின் அமைப்புகள் இந்த சட்டசபை தேர்தலையே புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. நாகாலாந்து தனிநாடு கோரும் பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தி இந்த கோரிக்கையை முன்வைத்து வருகின்றன.
இதனிடையே நாகலாந்து பழங்குடியினர் கூட்டமைப்பினருடன் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் நேற்று இரவு ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின் முடிவில் சட்டசபை தேர்தலை புறக்கணிப்போம் என 11 கட்சிகள் கூட்டாக கையெழுத்திட்டு அறிவித்துள்ளன.
நாகாலாந்து பிரச்சனைக்கு தீர்வு காணும் வரை சட்டசபை தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்றும் இந்த கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. இதில் பாஜக, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி, ஆம் ஆத்மி, நாகாலாந்து ஜனநாயக மக்கள் கட்சி, நாகலாந்து காங்கிரஸ், ஐக்கிய நாகா ஜனநாயக கட்சி, தேசிய மக்கள் கட்சி ஆகியவை கையெழுத்திட்டுள்ளன.
நாகலாந்து மாநிலத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் திடீரென தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்திருப்பது மத்திய அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக டெல்லியில் தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.