சிறுத்தையிடம் துணிச்சலுடன் போராடி 4வயது தம்பியை காப்பாற்றிய 11 வயது வீரச் சிறுமி
Recommended Video
டேராடூன்: உத்தர்காண்ட் மாநிலத்தில் தனது நான்கு வயது தம்பியை சிறுத்தையின் தாக்குதலில் இருந்து துணிச்சலாக போராடி காப்பாற்றிய 11 வயது சிறுமி படுகாயங்களுடன் சிகிக்சை பெற்று வருகிறார். அந்த சிறுமி தம்பியை சிறுத்தை கடிக்கவிடாமல் காப்பாற்றி அதிக தாக்குதலை எதிர்கொண்டாள்.
உத்தர்காண்ட் மாநிலம் பாவ்ரி மாவட்டத்தில் உள்ளது தேவ்குண்டாய் தள்ளி கிராமம். இந்த கிராத்தைச் சேர்ந்த சிறுமி ராக்கி. இச்சிறுமி கடந்த அக்டோபர் 4ம் தேதி தனது 4வயது தம்பியுடன் வீட்டின் அருகேவிளையாடிக் கொண்டிருந்தாள்.
அப்போது ஒரு சிறுத்தை சிறுமியின் தம்பியை தாக்க வந்திருக்கிறது. சிறுவன் பயந்து போய் நின்ற நிலையில் தம்பியை சிறுத்தை கடித்துவிடக்கூடாது என்று எண்ணி தம்பிக்கு முன்பாக போய் 11 வயது சிறுமி ராக்கி நின்றாள். இதனால் பாய்ந்து வந்த சிறுத்தை சிறுமி ராக்கியை கொடூரமாக கடித்து குதறியது.
ஒடிவந்த கிராம மக்கள்
சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஒடிவந்த சிறுமியின் அத்தை மதுதேவி மற்றும் கிராமத்தினர் சிறுத்தையை துரத்தினர். இதையடுத்து பயந்துபோன சிறுத்தை அங்கிருந்து ஓடி காட்டுக்குள் சென்று மறைந்து கொண்டது. தம்பியை காக்க உயிரை துச்சமாக மதித்து சிறுத்தையிடம் போராடிய சிறுமி ராக்கிக்கு கழுத்து உள்பட பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதாக அவளது அத்தை மது தேவி கூறினார்.
உயர்சிகிக்சைக்கு பரிந்துரை
காயம் அடைந்த சிறுமியை உடனே கிராமத்தினர் தூக்கிக்கொண்டு அருகில் உள்ளமருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு சிறுமி உடல் நிலை மோசமாக இருப்பதால் உடனே பெரிய மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும்படி பரிந்துரைத்தனர்.
3 நாளைக்கு பின் சிகிச்சை
இதையடுத்து சிறுமியின் பெற்றோர்கள் டெல்லியில் உள்ள அரசு மருத்துவனையில் சேர்த்துள்ளனர். ஆனால் அங்குள்ள அதிகாரிகள் வேறு எங்காவது உயர் சிகிச்சைக்கு சேர்க்குமாறு கூறி கைவிரித்துள்ளனர். இதனால் வேதனையுடன் மூன்று நாட்களை கடத்திய சிறுமியின் பெற்றோர் இறுதியாக உத்தர்காண்ட் மாநில வனத்துறை அமைச்சர் சத்பால் மகாராஜை அணுகி நிலையை கூறியுள்ளனர். இதையடுத்து சிறுமி ராக்கி, கடந்த 7ம் தேதி ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டாள்.
ஒருலட்சம் வழஙகிய அமைச்சர்
தற்போது அபாயகட்டத்தை தாண்டிவிட்ட சிறுமி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். சிறுமியை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த அமைச்சர் சத்பால் மகாராஜ் சிறுமியின் மருத்துவ செலவுக்கு ரூ.1லட்சம் வழங்கியதுடன் மேலும் உதவித்தொகையும் உரிய சிகிச்சைஅளிக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.
வீரப்பதக்கம் உறுதி
உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்தும் டெல்லியில் உள்ள சிறுமியின் உறவினர்களிடம் தொலைபேசியில் பேசினார், அவர்களுக்கு எல்லா உதவிகளையும் அளிப்பதாக உறுதியளித்தார். பாவ்ரி மாவட்ட நீதிபதி டி.எஸ் கார்பயால் சிறுமி ராக்கியின் துணிச்சலை பாராட்டியதுடன், அவரது பெயர் வீர பதக்கம் பெறுவதற்கான பட்டியலில் பரிந்துரைக்கப்படும் என்றார்.