ரேஷன் கடையில் உணவு தானியம் நிறுத்தம்.. பட்டினியால் பலியான 11 வயது சிறுமி.. உயிரை பறித்த ஆதார்!
Recommended Video
ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் ஆதார் எண் இணைக்கப்படாத ரேஷன் கார்டுக்கு உணவு தானியங்கள் வழங்கப்படாததால், 11 வயது சிறுமி பட்டினியால் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செப்டம்பர் 28ம் தேதி, இந்த சம்பவம் நடந்துள்ளதாகவும், சிறுமி பெயர் சந்தோஷி குமாரி என்றும், ஸ்க்ரோல் இணையதளம், பிரத்யேக செய்தி வெளியிட்டுள்ளது.
ரேஷன் கார்டுகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்று மத்திய அரசு இவ்வாண்டு பிப்ரவரியில் உத்தரவிட்டது. இந்த நிலையில், ஜாரகண்ட் மாநிலம், டிம்டெகா மாவட்டத்தில் உள்ள கரிமதி கிராமத்தில் கோய்லி தேவி என்பவர் இதுவரை ஆதார் அட்டை வாங்காததால் அவரது குடும்ப அட்டை ரத்து செய்யப்பட்டுவி்டதாம்.
இவரது குடும்பத்தை சேர்ந்த 10 பேரிின் பெயர்களும் ரேஷன் அட்டையிலிருந்து நீக்கப்பட்டுவிட்டதால் தினமும் சுமார் 100 சம்பாதிக்கும் இக்குடும்பம் மிகவும் சிரமமப்பட்டுள்ளது. கோய்லி தேவி கணவர், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் அவரால் வருமானம் கிடையாதாம்.
இதனால் குழந்தைகள் பள்ளிக்கூடத்தில் அளிக்கப்படும் மதிய உணவை மட்டும் உட்கொண்டு உயிரை காப்பாற்றி வந்தன. தசராவையொட்டி பள்ளிக்கு விடுமுறைவிடப்பட்டதால் சாப்பாடு கிடைக்காமல் பட்டினியால் சந்தோஷி குமாரி இறந்துவிட்டதாக அந்த வெப்சைட் செய்தி தெரிவிக்கிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்னமும் முழுமையாக ஆதார் அடையாள எண் மக்களை சென்று சேராத நிலையில், இதுபோன்ற கெடுபிடிகள் அவர்கள் வாழ்க்கையில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இந்த சம்பவம் உணர்த்தியுள்ளது. மதிய உணவு சாப்பிடவும் பள்ளி குழந்தைகளுக்கு ஆதார் அட்டை அவசியம் என மத்திய அரசு கூறியுள்ள நிலையில், இந்த சம்பவம் அதுபோன்ற திட்டத்திற்கு ஒரு எச்சரிக்கை மணியாக பார்க்கப்படுகிறது.