கொல்லம் தீ விபத்து: பலி எண்ணிக்கை 112 ஆக உயர்வு- வாணவேடிக்கைகளுக்கு தடை கோர முடிவு
கொல்லம்: கேரளா மாநிலம் கொல்லம் அருகே நடைபெற்ற கோயில் திருவிழா தீ விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 112 ஆக உயர்ந்துள்ள சம்பவம் அதிர்ச்சியலைகளை உருவாக்கியுள்ளது. 400க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
வெடி விபத்தினால் ஏற்பட்ட உயிரிழப்பை அடுத்து கோவில் திருவிழாக்கள், அரசியல் நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் வாணவேடிக்கைகளை நடத்த தடை விதிக்க வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர இந்திய மருத்துவச் சங்கம் (ஐ.எம்.ஏ.,) முடிவு செய்துள்ளது.
கொல்லம் புட்டிங்கல் தேவி கோவிலில் வருடம் தோறும் பங்குனி மாதம் பரணி நட்சத்திரத்தை முன்னிட்டு ட்டாசு வெடித்து கொண்டாடுவது வழக்கமான ஒன்றாகும்.
எனினும் கோவில்களில் பட்டாசு வெடித்து விழாக்களை கொண்டாட மாவட்ட மட்டத்தில் தடை உள்ளது. இருப்பினும் ஒவ்வொரு ஆண்டும் அனுமதி பெற்று பட்டாசு வெடிக்கப்படுவது வழக்கமாக இருந்து உள்ளது. தேவி கோவிலில் திருவிழாவில் பட்டாசு வெடிக்க அதிகமான பட்டாசுக்கள் வாங்கி குவிக்கப்பட்டு உள்ளது. சனிக்கிழமையன்று பரணி நட்சத்திரத்திருவிழா கொண்டாடப்பட்டது.
வெடி விபத்து
நேற்று அதிகாலை 3 மணியளவில் பட்டாசு வெடிக்கப்பட்ட போது, அதிலிருந்து சென்ற தீப்பொறியானது வெடிப்பொருட்கள் வைத்திருந்த குடோனில் விழுந்தது. இதனையடுத்து வெடிப்பொருட்கள் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறி தீ விபத்து ஏற்பட்டது.
சிதறிய கட்டிடம்
வெடிப்பொருட்கள் வைக்கப்பட்டு இருந்த கிடங்குக்கு அருகில் இருந்த திருவாங்கூர் தேவஸ்தான வாரியத்தின் கட்டிடம் ஒன்று முற்றிலும் வெடித்து சிதறியது. உடனடியாக வெடிவிபத்து ஏற்பட்ட பகுதியில் மீட்பு பணிகள் நடைபெற்றது.
நூற்றுக்கணக்கானோர் பலி
தீ விபத்து மற்றும் கட்டிடம் விழுந்து சிக்கியதில் சம்பவ இடத்தில் 80க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 400க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். குவியல் குவியலாக ரத்தக் காயங்களுடன் கிடந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தீவிர சிகிச்சை
திருவனந்தபுரம், மற்றும் கொச்சின் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்டு படையினர் கொல்லம் விரைந்தனர். ஹெலிகாப்டர் மூலம் காயத்தில் சிக்கியவர்களை மீட்க முதல்வர் உம்மன் சாண்டி உத்தரவிட்டார். காயமுற்றோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பலி எண்ணிக்கை அதிகரிப்பு
விடுப்பில் சென்ற அரசு டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் பணிக்கு வருமாறு மாநில அரசு வேண்டுகோள் விடுத்தது. இதனிடையே உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 112 ஆக உயிர்ந்துள்ளது. 60க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
வழக்குப் பதிவு
கோவில் நிர்வாகத்திற்கு எதிராகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. விசாரணையும் துரிதமாக நடைபெற்று வருகிறது. போலீசார் வெடிப்பொருட்கள் விநியோகம் செய்தவர்களின் இடங்களில் சோதனையும் மேற்கொண்டு உள்ளனர்.
மோடி உத்தரவு
கோவில் திருவிழாவில் போட்டி போட்டு பட்டாசு வெடித்ததன் காரணமாகவே இந்த துயரச்சம்பவம் நேர்ந்து உள்ளது என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது. கேரள மாநில அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டு உள்ளார்.
நிதி உதவி
விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிதிஉதவியாக வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்து உள்ளார். உம்மன் சாண்டி அரசு உயிரிழந்தவர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரண உதவி அறிவித்துள்ளார்.
வான வேடிக்கைக்குத் தடை
அனுமதியை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது. இதனிடையே கோவில் திருவிழாக்கள், அரசியல் நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் வாணவேடிக்கைகளை நடத்த தடை விதிக்க வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர இந்திய மருத்துவச் சங்கம் (ஐ.எம்.ஏ.,) முடிவு செய்துள்ளது.
சோகத்தில் கேரளா மக்கள்
கேரளா மாநிலத்தில் இன்னும் சில தினங்களில் விஷூ பண்டிகை கொண்டாட உள்ள நிலையில் நிகழ்ந்துள்ள இந்த தீ விபத்து அம்மாநில மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.