டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிடுபவர்களில் 114 பேர் மீது கிரிமினல் வழக்குகள்
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 114 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளது தெரிய வந்துள்ளது.
டெல்லி சட்டசபை தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 7ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி டெல்லியில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனுக்களை ஜனநாயக சீர்திருத்த அமைப்பு என்ற இயக்கம் ஆய்வு செய்துள்ளது.
ஆய்வு முடிவு குறித்து அந்த கழகத்தின் நிறுவனர் ஜக்தீப் சோக்கர் கூறுகையில்,
வேட்பாளர்கள்
டெல்லி தேர்தலில் போட்டியிடும் 673 வேட்பாளர்களில் 17 சதவீதம் அதாவது 114 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.
தேர்தல்
2013 மற்றும் 2008ம் ஆண்டுகளில் நடந்த டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் 16 மற்றும் 14 சதவீதம் பேர் மீது கிரிமினல் வழக்குகள் இருந்தன.
கிரிமினல் வழக்குகள்
673 வேட்பாளர்களில் ஒருவர் மீது கொலை வழக்கும், 5 பேர் மீது கொலை முயற்சி வழக்கும், 8 பேர் மீது பெண்களுக்கு எதிரான கொடுமைகள் குறித்த வழக்கும் உள்ளன. எந்த வேட்பாளர் மீதும் பாலியல் பலாத்கார வழக்கு இல்லை என்றார் சோக்கர்.
பாஜக
பாஜக வேட்பாளர்களில் 27 பேர் மீதும், ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களில் 21 பேர் மீதும் மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களில் 12 பேர் மீதும் கிரிமினல் வழக்குகள் உள்ளன.
துக்ளகாபாத்..
துக்ளகாபாத் தொகுதியில் அதிகபட்சமாக 5 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. ரஜௌரி கார்டன் மற்றும் திலக் நகர் தொகுதிகளில் 4 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.