ஓடும் ரயிலில்117 ஜெலெட்டின் குச்சிகள், 350 டெட்டனேட்டர்ஸ் வெடிபொருட்கள்; பெண்ணிடம் விசாரணை!
கோழிக்கோடு: சென்னை-மங்களூரு ரயிலில் 117 ஜெலெட்டின் குச்சிகள், 350 டெட்டனேட்டர்ஸ் கொண்டு சென்ற திருவண்ணாமலையை சேர்ந்த பெண் பிடிபட்டார்.
கோழிக்கோடு ரயில் நிலையத்தில் இந்த வெடிபொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட ரமணி என்ற பெண்ணிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று இரவு கர்நாடக மாநிலம் மங்களூரு நோக்கி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்றது. இந்த ரயில் இன்று காலை கேரள மாநிலம் பாலக்காடு ரயில் நிலையம் கடந்து சென்று கொண்டிருந்தது.இந்த ரயிலில் வெடிபொருட்கள் கொண்டு செல்லப்படுவதாக பாலக்காடு ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து கோழிக்கோடு ரயில் நிலையத்தில் அந்த ரயிலில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது டி1 பெட்டியில் இருக்கைக்கு அடியில் ஒரு பையில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 117 ஜெலெட்டின் குச்சிகள், 350 டெட்டனேட்டர்ஸ் வெடிபொருட்கள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினார்கள்.
இதனை ரயிலில் கொண்டு சென்றது திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ரமணி என்பது தெரியவந்தது. அவர் காட்பாடியில் இருந்து தலசேரிக்கு சென்றுள்ளார். தலசேரியில் கிணறு தோண்டுவதற்கு பயன்படுத்துவதற்காக ஜெலெட்டின் குச்சிகள் மற்றும் டெட்டனேட்டஸ் எடுத்து செல்வதாக ரமணி போலீசாரிடம் தெரிவித்தார். ரமணியிடம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.