சீமாந்திராவின் புதிய தலைநகர் விஜயவாடா...!
ஹைதராபாத்: சீமாந்திரா மாநிலத்தின் புதிய தலைநகராக விஜயவாடா அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் சந்திரபாபு நாயுடு இதை இன்று அறிவித்தார்.
முன்னதாக பிற்பகல் சரியாக 12.17 மணிக்கு சீமாந்திராவின் புதிய தலைநகரம் எது என்பதை முதல்வர் நாயுடு அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஜோசியர்கள்தான் 12. 17 மணிக்கு புதிய தலைநகரின் பெயரை அறிவிக்குமாறு நாயுடுவுக்கு அறிவுறுத்தியிருந்ததாக கூறப்பட்டது. ஆனால் முன்கூட்டியே தலைநகரின் பெயரை நாயுடு அறிவித்துள்ளார்.
ஆந்திர மாநில சட்டசபையில் இன்று இந்த அறிவிப்பை நாயுடு வெளியிட்டார்.
விஜயவாடா பிராந்தியத்தில்
இதுகுறித்து நாயுடு சட்டசபையில் கூறுகையில், ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகரம் விஜயவாடா பிராந்தியத்தில் அமைக்கப்படும். சர்வதேச தரத்தில் சிங்கப்பூருக்கு நிகராக இந்த புதிய தலைநகரம் அமைக்கப்படும் என்று அவர் அறிவித்தார்.
இஷ்டப்படி அறிவிப்பதா .. எதிரிக்கட்சிகள் ஆவேசம்
முன்னதாக நாயுடு தன் இஷ்டப்படி புதிய தலைநகரின் பெயரை அறிவிக்கக் கூடாது. சட்டசபையில் விவாதித்து அனைவரின் கருத்துக்களையும் ஆலோசித்து பின்னர்தான் முடிவு செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.
சட்டசபையில் ரகளைக்கு வாய்ப்பு
ஆனால் எதிர்க்கட்சியினருடன் கலந்து ஆலோசிக்காமல் நாயுடு புதிய தலைநகரை இன்று அறிவித்துள்ளதால் சட்டசபையில் பெரும் அமளிக்கு வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
தீவிர ஆலோசனை
கடந்த சில வாரங்களாகவே புதிய தலைநகரம் குறித்த ஆலோசனையில் நாயுடு தீவிரமாக இருந்து வந்தார். ஆனால் எதிர்க்கட்சியினருடன் அவர் இதுகுறித்து முறைப்படி ஆலோசனை எதுவும் நடத்தவில்லை. மேலும் ராயலசீமா பகுதியை அவர் புறக்கணிப்பதாகவும் குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
பிரிந்து போன தெலுங்கானா
கடந்த ஜூன் மாதம் ஆந்திராக இரண்டாக பிரிக்கப்பட்டது. தெலுங்கானா தனி மாநிலமானது. இருப்பினும் 10 வருடங்களுக்கு தெலுங்கானா, ஆந்திரா ஆகிய இரண்டுக்குமே ஹைதராபாத் பொது தலைநகராக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் போல
ஆனால் அதற்குள்ளாகவே புதிய தலைநகரை ஆயத்தப்படுத்தி வைத்து விட நாயுடு உறுதி பூண்டுள்ளார். கிட்டத்தட்ட சிங்கப்பூர் போல புதிய தலைநகரம் தலைசிறந்த நகரமாக உருவாக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
நிலம் விலை உயர்வு
இதுதொடர்பாக ஒரு கமிட்டியும் அமைக்கப்பட்டது. அது புதிய தலைநகருக்கான தேடல் மற்றும் தேவை குறித்து ஆராய்ந்து வந்தது. விஜயவாடா அல்லது குண்டூர் ஆகியவற்றில் ஒன்றில்தான் புதியதலைநகரம் அமையும் என்ற எதிர்பார்ப்புஏற்கனவே இருந்து வந்ததால், அங்கு நிலத்தின் விலை கிடுகிடுவென அதிகரித்து வந்தது.
ரியல் எஸ்டேட் ஆதாயத்திற்காக....!
முன்னதாக நாயுடு அமைச்சரவையில் உள்ள பலருக்கும் விஜயவாடா பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் இருப்பதால்தான் அவர்களின் நெருக்குதலுக்குப் பணிந்து விஜயவாடாவை நாயுடு தலைநகராக்கியுள்ளதாக எதிர்க்கட்சிகள் தரப்பில் புதிய குற்றச்சாட்டுக்களும் எழுந்துள்ளன.