"முதல்வர்களின்" முதல்வர் ஆன நிதீஷ்.. மது விலக்கு பிரச்சாரத்திற்கு அழைக்கும் பிற மாநிலங்கள்!
பாட்னா: பீகார் முதல்வர் நிதீஷ் குமாரை, தங்களது மாநிலத்திற்கு வந்து மது விலக்குக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து பேச வருமாறு கூறி 12 மாநிலங்கள் அழைப்பு விடுத்துள்ளனவாம்.
ஆனால் இந்த லிஸ்ட்டில் தமிழகம் இல்லை என்பதை தனியாக சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதேசமயம், பக்கத்து மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகம் போன்றவையெல்லாம் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
பீகார் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 5ம் தேதி பூரண மது விலக்கை அதிரடியாக அமலுக்குக் கொண்டு வந்தார் நிதீஷ். அது முதல் அந்த உத்தரவை அந்த மாநில அரசு இறுக்கமாகக் கடைப்பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
பிரமாதமான ஆதரவு
இந்த முடிவுக்கு பீகாரில் எதிரப்பு கிளம்பும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மக்கள் மது விலக்குக்கு ஒத்துழைப்பு கொடுத்து வருவதால் இந்த முடிவு கிட்டத்தட்ட வெற்றியாகி விட்டது.
பிற மாநில முதல்வர்கள் ஆர்வம்
நிதீஷ் செய்த இந்த சாதனைச் செயலால் கவரப்பட்டுள்ள பிற மாநில முதல்வர்கள் பலர் நிதீஷ் பாணியில் தாங்களும் மது விலக்கை அமல்படுத்தலாமா என்று யோசித்து வருகின்றனராம்.
பிரச்சாரத்திற்கு அழைப்பு
மேலும் மது விலக்கு தொடர்பாக தங்களது மாநிலத்தில் வந்து பிரச்சாரம் செய்யமாறு 12 மாநில முதல்வர்கள் நிதீஷுக்கு அழைப்பு விடுத்துள்ளனராம்.
யார் யார்?
உத்தரகாண்ட், ஒடிசா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஆந்திரா, கர்நாடகா, ஹரியானா, பஞ்சாப் ஆகியவை அதில் சில மாநிலங்கள். மது விலக்கை எப்படி அமல்படுத்தலாம், வருவாய் இழப்பை எப்படி சரிக்கட்டலாம் என்பது குறித்து நிதீஷின் ஆலோசனையைப் பெற இவர்கள் ஆர்வம் தெரிவித்துள்ளனராம்.
பிரச்சாரத்திற்கு செல்கிறார் நிதீஷ்
இந்த அழைப்பை ஏற்று ஒவ்வொரு மாநிலமாக செல்ல முதல்வர் நிதீஷ் குமார் முடிவு செய்துள்ளாராம். பாழாய்ப்போன தமிழ்நாட்டுக்கும் அப்படியே ஒரு எட்டு வந்துட்டுப் போங்க நிதீஷ்.. !