13 பேரின் உயிரைக் குடித்த போலி மதுபானம் ! மும்பையில் பரிதாபம்!!
மும்பை : புறநகர் பகுதியான மலாட் அருகே மால்வானியில் உள்ள லட்சுமி நகர் குப்பத்தில் போலி மதுபானம் குடித்தவர்களில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அங்கு மது அருந்தியவர்களில் பலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர்களை மலாட் மற்றும் சாந்திவலியில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், 13 பேர் உயிரிழந்தனர். 7 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுபற்றி தகவல் அறிந்த காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் போலி மதுபானம் குடித்ததால் அவர்கள் இறந்திருப்பதை உறுதி செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ராஜு லங்க்டா என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். போலி மதுபான உயிரிழப்பில் தொடர்புடைய மேலும் சிலர் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.
இது குறித்த விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள மகாராஷ்ட்ர அரசு 2 நாட்களுக்கு அறிக்கை தாக்கல் செய்ய ஆணையிட்டுள்ளது.