கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - 13 பேர் பலி ... உ.பி.யில் சோகம்
லக்னோ: உத்திரப்பிரதேசத்தில் கட்டுமானப் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த கட்டிடம் ஒன்று எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்த விபத்தில் 13 ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உத்திரபிரதேசம் மாநிலம் சந்தவ்லி மாவட்டத்தில் கட்டுமானப் பணி நடைபெற்று வரும் கட்டிடம் ஒன்று இன்று அதிகாலை எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தது. இதில், அக்கட்டிடத்தில் தங்கி இருந்த 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள்.
கட்டிடம் இடிந்து விழுந்த சத்தத்தைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தார், உடனடியாக இது தொடர்பாக தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த தீயணைப்பு படையினர் கட்டிடத்தில் இடிபாடுகளில் சிக்கியிருந்த சடலங்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு இடிந்து விழுந்த கட்டிடத்தின் பகுதிகளை அப்புறப்படுத்தும் பணியில் மீட்பு படையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக சந்தவ்லி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த விபத்தில் சிக்கி காயம் அடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்தாண்டு சென்னை மவுலிவாக்கத்தில் நடந்த கட்டிட விபத்தில் 60க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது குறிப்பிடத்தக்கது.