13 அடி அடர்த்தியான சுவர் இருக்கிறது.. ஆதார் தகவல்களை திருட முடியாது.. மத்திய அரசு 'அடடே' பதில்
ஆதாருக்கு பாதுகாப்பாக 13 அடி அடர்த்தியான சுவர் இருப்பதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
டெல்லி: ஆதாருக்கு பாதுகாப்பாக 13 அடி அடர்த்தியான சுவர் இருப்பதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ஆதார் தொடர்பான பல்வேறு வழக்குகளை உச்ச நீதிமன்றம் ஒன்றாக விசாரித்து வருகிறது. முக்கியமாக ஆதார் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு வழக்கு நிலுவையில் இருக்கிறது.
வாட்ஸ் ஆப் குழு ஒன்றில் 500 ரூபாய்க்கு ஆதார் தகவல்கள் விற்கப்பட்டதில் இருந்து இந்த பிரச்சனை பெரிய அளவில் விவாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் ஆதார் தகவல்களை பாதுகாக்க என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது என்று உச்சநீதி மன்றம் கேள்வி எழுப்பியது.
இதற்கு மத்திய அரசு சார்பாக ஆஜரான தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் ''ஆதார் தகவல்கள் மிகவும் கவனமாக பாதுகாக்கப்படுகிறது. பொதுமக்களின் ஆதார் தகவல்களை அவர்கள் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்த முடியாது'' என்றுள்ளார்.
மேலும் ''ஆதாருக்கு பாதுகாப்பாக 13 அடி அடர்த்தியான சுவர் இருக்கிறது. அந்த சுவர் இருக்கும் கட்டிடத்திற்குள்தான் ஆதார் தகவல்கள் வைக்கப்பட்டு இருக்கிறது. இதனால் ஆதார் தகவலை யாரும் திருட முடியாது'' என்றுள்ளார்.