அசாம் வார சந்தையில் தீவிரவாதிகள் சரமாரி தாக்குதல்.. 12 அப்பாவி மக்கள் சாவு.. பாதுகாப்பு படை பதிலடி
குவகாத்தி: அசாமில் போடோலாந்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 12 பேர் உயிரிழந்தனர். பாதுகாப்பு படையினரின் பதிலடியில் தீவிரவாதி ஒருவன் சுட்டு கொல்லப்பட்டான்.
கோகரஜஹார் மாவட்டத்தில் மக்கள் நெரிசல் மிகுந்த வார சந்தையில் பயங்கரவாதிகள் இன்று மதியம் திடீரென பொதுமக்களை குறிவைத்து துப்பாக்கி சூடு நடத்தினர்.
அப்போது பயங்கரவாதிகளில் ஒருவன் கையெறி குண்டையும் வீசினான். இதனால் அந்த இடம் புகை மண்டலமானது.
தீவிரவாத தாக்குதல் பற்றி தகவல் அறிந்ததும் பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் பணியை தொடங்கினர். பாதுகாப்பு படை மற்றும் பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை தொடங்கியது.
இதில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அப்பாவி மக்கள் 12 பேர் இத்தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.
அசாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலையை எடுத்துரைத்தார். இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு, கூடுதல் பாதுகாப்பு படையினரை அனுப்ப உத்தரவிடப்பட்டது.
வடகிழக்கு மாநிலமான அசாமில் நீண்ட காலமாக போடோ தீவிரவாதிகள் அச்சுறுத்தல் நிலவி வரும் நிலையில், இத்தாக்குதலை போடோ தீவிரவாதிகள்தான் நடத்தியிருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. மறைந்துள்ள தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் தேடி வருகிறார்கள்.
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பல்வேறு கட்சி தலைவர்களும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.