நாகாலாந்து:பொதுமக்கள் 13 பேர் சுட்டுக் கொலை- செல்போன் இண்டர்நெட் சேவை துண்டிப்பு!
கோஹிமா: நாகாலாந்து மாநிலத்தில் பாதுகாப்பு படையினரால் பொதுமக்கள் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் செல்போன் இண்டர்நெட் சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. எஸ்.எம்.எஸ். சேவைகளிலும் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளது. கோஹிமாவில் நடைபெற்ற ஹார்ன்பில் கொண்டாட்டங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நாகாலாந்து மாநிலம் மோன் மாவட்டம், மியான்மர் எல்லையில் உள்ளது. மியான்மரில் பதுங்கி இருக்கும் நாகா தீவிரவாதிகள், உல்பா தீவிரவாதிகள் நடமாட்டம் மோன் மாவட்டத்தில் அதிகம் உள்ளது. இதனால் அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடுவர்.
நாகாலாந்து: 13 பொதுமக்கள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொலை- ராகுல், மமதா கடும் கண்டனம்
13 பேர் சுட்டுக் கொலை
இந்நிலையில் மோன் மாவட்டம் ஓடிங் பகுதியில் நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் வீடு திரும்ப காத்துக் கொண்டிருந்த நிலையில் காணாமல் போயினர். இதனையடுத்து சக தொழிலாளர்கள் அவர்களைத் தேடினர். அப்போது டிரக் வாகனம் ஒன்றில் 13 சுரங்க தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு சடலமாக வைக்கப்பட்டிருந்தது கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பொதுமக்கள் தாக்குதல்
பின்னர்தான் தீவிரவாதிகள் என சந்தேகித்து 13 பேரையும் பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றது தெரியவந்தது. இதனால் கொந்தளித்துப் போன அப்பகுதி மக்கள், பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் பாதுகாப்பு படையினரது வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விசாரணைக் குழு நியமனம்
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த குழு ஒன்றை நாகாலாந்து அரசு அமைத்துள்ளது. மேலும் அசம்பாவிதங்கள், வன்முறை சம்பவங்கள் தொடராமல் இருக்க முன்னெச்சரிக்கையாக செல்போன் இண்டர்நெட் சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. பல்க் எஸ்.எம்.எஸ்.சேவையும் தடை செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவத்துக்கு ராணுவம் வருத்தம் தெரிவித்த போதும் நாகா இன மக்களிடையே பெரும் கொந்தளிப்பு நிலவுகிறது.
ஹார்ன்பில் கொண்டாட்டம் ரத்து
இதனிடையே தலைநகர் கோஹிமா அருகே ஆண்டுதோறும் நடைபெறும் ஹார்ன்பில் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நாகா பழங்குடி இன மக்கள் தங்களது கலை கலாசாரத்தை வெளிப்படுத்தும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஹார்ன்பில் நிகழ்வுகளில் அரங்கேறும். தற்போது 13 பேர் கொல்லப்பட்ட சூழலில் இந்த ஹார்ன்பில் நிகழ்ச்சிகளை மாநில அரசு ரத்து செய்துள்ளது. ஏற்கனவே ஹார்ன்பில் நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டோம் என்று கோன்யாக் பழங்குடிகளின் பிரதிநிதிகள் அறிவித்திருந்தனர்.