50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பிக்கப் டிரக்.. பரிதாபமாக பறிபோன 14 உயிர்கள்!அதிகாலையில் சோகம்
போபால்: மத்தியப் பிரதேசத்தில் பிக்கப் டிரக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அம்மாநில அரசு நிவாரணம் அறிவித்திருக்கிறது.
மத்தியப் பிரதேச மாநிலம் ஷாபுராவின் மசுர்குக்ரி கிராமத்தில் இருந்து அம்ஹாய் தேவ்ரிக்கு நேற்று சிலர் பிக்கப் டிரக்கில் சென்றிருக்கின்றனர். அவர்கள், இன்று அதிகாலை சொந்த கிராமத்திற்கு திரும்பியுள்ளனர். அப்போது சுமார் 1.30 மணியளவில் பட்ஜார் காட் எனும் பகுதியில் வாகனம் கட்டுப்பாட்டை மீறி, தடைகளை தாண்டி அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 14 பேர் உயிரிழந்துள்ளனர். 20 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

விபத்தையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், "45-50 அடி பள்ளத்தில் பிக்கப் டிரக் கவிழ்ந்திருக்கிறது. விபத்து இரவு நேரத்தில் நடந்ததால், மீட்பு பணியில் சற்று பின்னடைவு இருந்தது. இருப்பினும், உயிரிழந்தவர்களின் உடல்கள் விடியற்காலைக்குள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
உயிரிழந்தவர்களில் ஆண்கள் 7 பேர், பெண்கள் 7 பேர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். தற்போது படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களில் 6 பேரின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. பிக்கப் டிரக் சாலையின் திருப்பத்தின்போது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்திருக்கிறது. விபத்து தொடர்பாக விசாரணையை தொடங்கியுள்ளோம்" என்று கூறியுள்ளார்.
விபத்து நடந்த இடத்தை திண்டோரி மாவட்ட ஆட்சியர் விகாஸ் மிஸ்ரா, போலீஸ் சூப்பிரண்டு அகில் படேல் ஆகியோர் நேரில் பார்வையிட்டுள்ளனர். மாநிலத்தின் அமைச்சர்களும் மீட்பு பணியை துரிதப்படுத்த உத்தரவிட்டிருந்தனர். இந்த விபத்து குறித்து இரங்கல் தெரிவித்துள்ள மத்தியப் பிரதேச மாநில முதலமைச்சர் மோகன் யாதவ், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும் இந்த விபத்து குறித்து இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது x சோஷியல் மீடியா தளத்தில், "மத்திய பிரதேசத்தின் திண்டோரி மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் பலர் உயிரிழந்த செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
நேற்று ஜார்க்கண்ட்டில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 12 பேர் வரை உயிரிழந்த நிலையில், இன்று மற்றொரு விபத்தில் 14 பேர் உயிரிழந்திருக்கும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications