கொரோனா லாக்டவுன்: சொந்த ஊர் செல்லும் வழியில் உ.பி., ம.பி. விபத்துகளில் 14 தொழிலாளர்கள் பலி
முசாபர்நகர்/குணா: லாக்டவுனால் சொந்த ஊர்களுக்கு நடைபயணமாகவும் டிரக்கிலும் பயணித்த தொழிலாளர்கள் விபத்தில் சிக்கினர். இந்த விபத்துகளில் சிக்கி நேற்று ஒரே நாளில் 14 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க லாக்டவுன் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. 45 நாட்களுக்கும் மேலாக இந்த லாக்டவுன் நீட்டிக்கிறது.
லாக்டவுன் மேலும் நீட்டிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். இதனால் பிற மாநிலங்களில் இருந்து சொந்த மாநிலங்களுக்கு புறப்படும் தொழிலாளர்கள் எண்ணிக்கை மிகவும் அதிகரித்திருக்கிறது.
பஞ்சாப் மாநிலத்தில் இருந்து பீகார் நோக்கி தொழிலாளர்கள் நடைபயணமாக புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் உத்தரப்பிரதேசத்தின் முசாபர்நகர் அருகே தேசிய நெடுஞ்சாலை எண் 9-ல் நேற்று இரவு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது உத்தரப்பிரதேச மாநில அரசு பேருந்து ஒன்று இந்த தொழிலாளர்கள் மீது திடீரென மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 6 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.
இதேபோல் மத்திய பிரதேசத்தில் 60க்கும் அதிகமான தொழிலாளர்களுடன் சென்ற டிரக் ஒன்று பேருந்து மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 8 பேர் பலியாகினர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த 8 பேரும் மகாராஷ்டிராவில் இருந்து உத்தரப்பிரதேசத்தில் உள்ள சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்த தொழிலாளர்கள்.
6 migrant workers who were walking along the Muzaffarnagar-Saharanpur highway killed after a speeding bus ran over them late last night, near Ghalauli check-post. Case registered against unknown bus driver. pic.twitter.com/s81e7gpYkH
— ANI UP (@ANINewsUP) May 14, 2020
Recommended Video
லாக்டவுன் காலத்தில் இப்படி சொந்த ஊர் சென்ற இடம்பெயர் தொழிலாளர்களில் 60-க்கும் அதிகமானோர் விபத்துகளில் சிக்கி உயிரிழந்தனர். அண்மையில் மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் தண்டவாளத்தில் ஓய்வெடுத்த தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் மோதியது. இதில் 17 பேர் அதே இடத்தில் துடிதுடித்து இறந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது குறிப்பிடத்தக்கது.