ம.பி.யில் போர்வெல் குழியில் விழுந்த 14 மாத குழந்தை- மீட்க பெரும் போராட்டம்!
போபால்: மத்திய பிரதேசத்தில் 100 அடி ஆழ போர்வெல் குழியில் விழுந்த 14 மாத குழந்தையை மீட்க மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மத்திய பிரதேச மாநிலத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் லிதோரா என்ற கிராமத்தில் 2 மாதங்களுக்கு முன்பு போடப்பட்ட போர்வெல் குழியில் தண்ணீர் கிடைக்காததால் அப்படியே மூடாமல் விட்டுச் சென்றுள்ளார் உரிமையாளர். இந்த குழி அருகே விளையாடிக் கொண்டிருந்த 14 மாத ஆண் கைக் குழந்தை நேற்று தவறி உள்ளே விழுந்தது.
இதனைத் தொடர்ந்து மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துசென்று அருகே மற்றொரு குழியை தோண்டினர். ஆனால் மிகப் பெரிய பாறை குறுக்கிட்டதால் முட்டுக்கட்டை ஏற்பட்டது. இருப்பினும் தொடர்ந்து குழந்தையை மீட்கும் முயற்சிகள் விடிய விடிய நடைபெற்றன. தொடர்ந்தும் மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.
இது குறித்து சத்தர்பூர் மாவட்ட காவல்துறை அதிகாரி நீரஜ் பாண்டே கூறுகையில், பொக்லைன் இயந்திரம் உதவியுடன் குழி தோண்டப்பட்டு வருகிறது. குழந்தை 18 அடியில் சிக்கியிருக்கும் நிலையில் சுவாசிப்பதற்கான ஆக்சிஜன் தொடர்ந்து செலுத்தப்பட்டு வருகிறது. மருத்துவர் குழுவும் இங்கேயே முகாமிட்டுள்ளனர். எப்படியும் குழந்தையை பாதுகாப்பாகமீட்டுவிடுவோம் என்றார்.