மகாராஷ்டிராவில் கேடராக்ட் ஆபரேஷன் செய்து கொண்ட 14 பேரின் பார்வை பறிபோனது
வாஷிம்: மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள வாஷிம் சிவில் மாவட்ட மருத்துவமனையில் கண்புரைக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட 14 பேருக்கு பார்வை பறிபோயுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் வாஷிம் மாவட்டத்தில் உள்ள சிவில் மாவட்ட மருத்துவமனையில் கடந்த மாதம் 23 பேருக்கு கண்புரைக்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 6ம் தேதி முதல் 29ம் தேதி வரையிலான காலகட்டத்தில் அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டோரில் 9 பேர் கடந்த மாதம் 15ம் தேதி மருத்துவமனைக்கு திரும்பி வந்துள்ளனர். கண்களில் இருந்து நீர் வருகிறது, கண்கள் சிவப்பாக உள்ளது, பார்வை சரியாகத் தெரியவில்லை என்று தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்த டாக்டர் சவுகான் அவர்கள் அனைவரையும் அகோலாவில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். அதன் பிறகு வந்த 5 பேரையும் அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அந்த 14 பேரையும் பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர்களை ஜெ.ஜெ. மருத்துவமனைக்கு செல்லுமாறு தெரிவித்துள்ளனர். இவ்வாறு அறுவை சிகிச்சை செய்த 23 பேரும் ஜெ.ஜெ. மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதில் 9 பேரின் பார்வையை மற்றும் டாக்டர்களால் காப்பாற்ற முடிந்தது. மற்ற 14 பேரின் பார்வை பறிபோனது.
வாசிம் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் முறையாக சுத்திகரிக்கப்படாததால் அவர்களின் கண்களில் பாக்டீரியா தாக்குதல் ஏற்பட்டு பார்வை பறிபோனதாக ஜெ.ஜெ. மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தை அடுத்து அறுவை சிகிச்சை செய்த வாஷிம் மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.