ஓடும் பஸ்சில் 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 5 பேர்: ரோட்டில் வீசிய கொடூரம்
போபால்: மத்தியபிரதேச மாநிலத்தில் ஓடும் பேருந்தில் 14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு ரோட்டில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியபிரதேசம் சிங்குரவ்லி மாவட்டத்தில் மாவட்ட தலைநகரில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது நல்கதானி கிராமத்தில் ரோட்டோரம் ரத்தம் காயங்களுடன் கிடந்த 14 வயது சிறுமியை கிராமத்தை சேர்ந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவளுக்கு சிகிச்சை அளிக்கபட்டது பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கபட்டது.
பதை பதைக்க வைக்கும் இந்த சம்பவம் பற்றி போலீஸ் விசாரணையில் கூறப்படுவதாவது:-
ஞாயிறு இரவு தலித் சிறுமி ஒருவர் தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு திரும்பி கொண்டிருந்தார். சித்திக் பகுதிக்கு செல்லும் பேருந்தில் சென்றவர்கள் சிறுமிக்கு லிப்ட் கொடுக்க முன்வந்தார்கள். அந்த பேருந்து உள்ளூரை சேர்ந்த ஒரு வியாபார பிரமுகரின் திருமண வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தது. பேருந்தில் டிரைவர் 2 கிளினர் உள்பட 5 பேர் இருந்தனர். சிறிது நேரம் சென்ற உடன் பேருந்தில் இருந்த 5 பேரும் சிறுமியை பலவந்தபடுத்தி உள்ளனர்.
இதனால் அந்த சிறுமி அலறி உள்ளார். உடனே 5 பேரும் பஸ் ஜன்னலை மூடினார்கள். பின்னர் பேருந்தை ஒதுக்குபுறமான ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதியில் நிறுத்தி, 5 பேரும் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் பேருந்தில் இருந்து சிறுமியை தூக்கி வீசி உள்ளனர். இதில் சிறுமியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர்களுக்கு போலீசார் தகவல் தெரிவித்து உள்ளனர். மேலும் மருத்துவ சான்றிதழுக்காக காத்திருக்கின்றனர்.
சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் பேருந்தில் டிரைவர் உள்பட 4 பேரை குழந்தைகள் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவமாணவி கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியது. இதனைத் தொடர்ந்து பெண்களின் பாதுகாப்பிற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.