"உயிர்த்தெழுந்த" சஜி.. ஆடிப் போன ஆடிக்கொள்ளி கிராமம்.. வயநாட்டில் ஒரு பரபரப்பு!
இறந்து 15 நாள் ஆன நிலையில் நபர் ஒருவர் உயிரோடு வந்தார்.
வயநாடு, கேரளா: இறந்தவர் 15 நாள் கழித்து உயிரோடு வந்ததால், குடும்பத்தினர் மகிழ்ச்சி நிறைந்த ஆனந்த கண்ணீரில் திக்குமுக்காடி போய்விட்டார்கள். கேரளாவில்தான் இந்த அதிசயம் நடந்திருக்கிறது!!
வயநாடு அருகில் உள்ள ஆடிக்கொள்ளி என்ற பகுதி உள்ளது. இங்கு வசித்து வருபவர் சஜி. இவருக்கு வயது 48. கூலி செய்து வரும் சஜிக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை. இந்த ஆடிக்கொள்ளி என்ற பகுதி கர்நாடக எல்லையில் இருக்கிறது. அதனால் அந்த மாநிலத்துக்கும் கூலிக்கு ஆள் வேண்டும் என்று கேட்டால் சஜி திடீர் திடீரென கிளம்பி போய்விடுவார். வேலை முடிய எப்படியும் நான்கைந்து நாள்கூட ஆகிவிடும். அதையெல்லாம் முடித்துவிட்டுதான் ஊர் திரும்புவார்.
சஜியை காணவில்லை
இப்படித்தான் கடந்த 3-ம் தேதி சஜி வேலைக்கு ஆள் வேணுமாம், கூப்பிடுகிறார்கள் என்று வீட்டில் சொல்லிவிட்டு கர்நாடகா போனார். ஆனால் போனவர் திரும்பி வரவே இல்லை. எப்பவுமே குறைந்தது ஒரு வாரத்திற்குள்ளாவது சஜி வேலையை முடித்துவிட்டு வந்துவிடுவார். ஆனால் இப்போது நாள்கணக்காகியும் வராததால் வீட்டில் உள்ளவர்கள் பயந்தே போய்விட்டார்கள். அதனால் சஜியை காணவில்லை என்று போலீசிலும் புகார் அளித்தார்கள்.
முகம் சிதைந்த பிணம்
போலீசாரும் காணாமல் போன சஜியை தேடி வந்தார்கள். இந்த நிலையில், பைராகுப்பா என்ற பகுதியில் ஒரு ஆண் சடலம் இருப்பதாகவும், ஆனால் முகம் சரியாக தெரியாமல் சிதைந்து போய் உள்ளதாகவும் போலீசாருக்கு தகவல் வந்தது. பைராகுப்பா என்ற பகுதி ஒரு மலைப்பகுதி ஆகும்.
கட்டிக் கொண்டு அழுதனர்
ஒருவேளை அந்த சடலம் காணாமல் போன சஜியாக இருக்குமோ என்று நினைத்து போலீசார் அவரது குடும்பத்துக்கு தகவல் அளித்தார்கள். விரைந்து வந்த குடும்பத்தினர், சடலத்தின் காலில் ஆபரேஷன் செய்யப்பட்ட தழும்பு இருந்ததை பார்த்தார்கள். பின்னர் இறந்தது சஜிதான் என்று சடலத்தை கட்டிக் கொண்டு அழுதார்கள். இறந்த உடலை வீட்டில் கொண்டு போய் வைத்து கிறிஸ்தவ முறைப்படி எல்லா சடங்கையும் செய்து முடித்தார்கள். ஊரே ஒன்றுகூடி வந்து சடலத்தை பார்த்து அழுதது. பின்னர், சடலத்தை எல்லோரும் கதறி அழுதவாறே செபாஸ்டியன் சர்ச்-ல் புதைத்தும் வந்து விட்டனர்.
நான் சாகவில்லை
இறந்து 15 நாள் ஆகிவிட்டாலும் சஜியை யாராலும் மறக்க முடியவில்லை. வீட்டில் எல்லோருமே அழுது கொண்டிருந்தனர். இந்த நேரத்தில்தான் திடீரென சஜி வீட்டுக்குள் நுழைந்தார். இதை பார்த்த குடும்பத்தினர் எல்லோருக்குமே ஒரு கணம் தூக்கி வாரிப்போட்டது. சந்தோஷத்தில் ஓடிச்சென்று சஜியை கட்டிக் கொண்டு அழுதார்கள். எல்லோரும் ஓடிவந்து கட்டி அழுவதை பார்த்த சஜிக்கு எதுவுமே புரியவில்லை. பின்னர்தான் விளக்கம் அளிக்கப்பட்டது. இதைக் கேட்ட சஜி உடனடியாக போலீஸ் ஸ்டேஷன் சென்று தான் இறக்கவில்லை, உயிரோடுதான் இருக்கிறேன் என்று சொல்லி விட்டு வந்தார்.
இறந்தது யார்?
இப்போது போலீசாருக்கு அடுத்த பிரச்சனை ஆரம்பமாகிவிட்டது. சஜி உயிரோடு வந்துவிட்டதால், அப்போ இறந்தது யார் என்று? திரும்பவும் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில் சஜி குடும்பத்துக்கும் மற்றொரு பிரச்சனை ஆரம்பமாகி விட்டது. சஜி குடும்பம் என்பதால்தான் செபாஸ்டியன் சர்ச்-ல் சடலத்தை புதைக்க அனுமதிக்கப்பட்டது.
பிணத்தை தோண்டி எடுங்கள்
இப்போது சஜி உயிரோடு இருப்பதால் புதைக்கப்பட்ட பிணத்தை தோண்டி எடுக்குமாறு குடும்பத்தாருக்கு ஆலயம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது இறந்தது யார்? போலீசார் விசாரணை என்னாகும்? இறந்த உடலை தோண்டி எடுத்து என்ன குடும்பத்தார் என்ன செய்வார்கள்? என்பதெல்லாம் இனிமேல்தான் தெரியவரும். ஆனால் இறந்தவர் உயிரோடு வந்த சந்தோஷத்திலிருந்து இன்னும் அந்த குடும்பம் மீளவே இல்லை.