எடியூரப்பாவுக்கு 15 நாள் அவகாசமா? ரிசார்ட் பில் எகிறிடுமே..!
பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு ஆளுநர் 15 நாட்கள் அவகாசம் அளித்திருப்பது காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கட்சியினரை கலக்கம் அடைய செய்துள்ளது.
Recommended Video
பெங்களூரு: பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு ஆளுநர் 15 நாட்கள் அவகாசம் அளித்திருப்பது காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கட்சியினரை கலக்கம் அடைய செய்துள்ளது.
நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக 104 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனாலும் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை இல்லாததால் ஆட்சியமைப்பதில் இழுபறி ஏற்பட்டது.
பாஜகவை ஆட்சிக்கு வர விடாமல் தடுக்க முடிவு செய்த காங்கிரஸ், ஜேடிஎஸ் தலைமையில் ஆட்சியமைக்க சம்மதம் தெரிவித்து குமாரசாமியை முதல்வராக்க முடிவு செய்தது.
இழுத்தடித்த ஆளுநர்
ஜேடிஎஸ் உடன் பாஜக நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடியவே, பதவியேற்புக்கான பணிகளில் ஜரூராக ஈடுபட்டது ஜேடிஎஸ் - காங்கிரஸ் கூட்டணி. ஆனால் கவர்னர் அந்த கூட்டணியை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்காமல் இழுத்தடித்தார்.
மிரட்டிய குமாரசாமி
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, பாஜக வினர் ஜேடிஎஸ் எம்எல்ஏக்களை இழுக்க தலைக்கு 100 கோடி ரூபாயும் அமைச்சர் பதவியும் தருவதாக ஆசை காட்டுவதாக குற்றம்சாட்டினார். ஒரு ஜேடிஎஸ் எம்எல்ஏவை இழுத்தால் பாஜகவில் இருந்த 2 பேரை தூக்குவோம் என்றும் மிரட்டல் விடுத்தார்.
ஈகிள்டன் ரிசார்ட்
இதையடுத்து கைவசம் உள்ள எம்எல்ஏக்களை தக்க வைக்க, கூவத்தூர் ஃபார்முலாவை அப்படியே கையிலெடுத்தது காங்கிரஸ். அக்கட்சி எம்எல்ஏக்கள் அனைவரையும் பட்டியல் போட்டு மைசூர் சாலையில் உள்ள ஈகிள்டன் ரிசார்ட்டில் அடைத்து வைத்தது.
எடியூரப்பாவுக்கு எதிர்ப்பு
இந்நிலையில் கர்நாடக முதல்வராக எடியூரப்பா இன்று பதவியேற்க நேற்று அழைப்பு விடுத்த ஆளுநர் வஜூபாய் வாலா, பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம் அளித்துள்ளார். இதற்கு ஜேடிஎஸ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
15 நாள் ரிசார்ட்டிலேயேவா?
எடியூரப்பாவுக்கு 15 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதால் காங்கிரஸ் எம்எல்ஏக்களை 15 நாட்களும் ரிசார்ட்டிலேயே அடைத்து வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வெளியில் விட்டால் நிச்சயம் அவர்கள் அணி மாறுவதற்கான வாய்ப்பு அதிகம் என்பதால், அவர்களை வெளியே விட காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகள் விரும்பவில்லை.
பில் எகிறிடும்
வெளியே விடாமல் அந்த சொகுசு ரிசார்ட்டிலேயே எம்எல்ஏக்களை அடைத்து வைத்தால் பில்லும் எகிறி விடும். இதனால் ஜேடிஎஸ் காங்கிரஸ் கட்சிகளின் அடுத்த கட்ட நடவடிக்கை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.