சித்து மீது கர்நாடக மக்கள் செம கோபம்.. பாதி அமைச்சர்கள் கூண்டோடு காலி!
பெங்களூரு: கர்நாடக முதல்வராக இருந்த சித்தராமையா மீதும், காங்கிரஸ் ஆட்சி மீதும் கர்நாடக மக்கள் நல்ல கோபத்துடன் இருந்தது தெரிய வந்துள்ளது. சித்தராமையா ஒரு தொகுதியில் தோல்வியடைந்துள்ளார். அவரது அமைச்சர்கள் பாதிப் பேர் மண்ணைக் கவ்வியுள்ளனர்.
சித்தராமையா தலைமையிலான கர்நாடக அரசு தனது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளத் தவறி விட்டது. சட்டசபைத் தேர்தலில் அக்கட்சி 2வது இடத்தையே பிடித்துள்ளது. பாஜக தனிப் பெரும் கட்சியாக வந்து விட்டது.
இந்தத் தேர்தல் மூலம் அரசுக்கு எதிராக மக்கள் கடும் அதிருப்தியுடன் இருந்தது தெரிய வந்துள்ளது. சித்தராமையா 2 தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் சொந்த தொகுதியான சாமுண்டேஸ்வரியில் அவர் மண்ணைக் கவ்வினார். பாதாமி தொகுதியில் தட்டுத் தடுமாறி வென்றார்.
சித்தராமையா அமைச்சரவையில் மொத்தம் 33 அமைச்சர்கள் இருந்தனர். இவர்களில் பாதிப் பேர் தோல்வியடைந்துள்ளனர். ராமநாத் ராய், ரேவண்ணா, காகோடு திம்மப்பா, சந்தோஷ் லேட், உமாஸ்ரீ, வினய் குல்கர்னி, எச். சி. மகாதேவப்பா, சரன் பிரகாஷ் பாட்டீல், எஸ்.எஸ். மல்லிகார்ஜுன், ஆஞ்சநேயா, ஏ மஞ்சு, டி.பி. ஜெயச்சந்திரா, பசவராஜ் ராயரெட்டி, பிரமோத் மத்வராஜ், ருத்ரப்பா லாமனி ஆகிய 15 பேரே தோல்வியைத் தழுவிய அமைச்சர்கள்.
சித்தராமையா மீதும், காங்கிரஸ் ஆட்சி மீதும் மக்கள் கடும் அதிருப்தி, கோபத்தில் இருந்ததே இந்த தோல்விக்கு முக்கியக் காரணமாக பார்க்கப்படுகிறது.