குடிக்க நீரின்றி, வெயிலை தாக்கு பிடிக்க முடியாமல் பலியான 15 குரங்குகள்.. ம.பியில் நிகழ்ந்த துயரம்
போபால்: நாடு முழுவதும் வறட்சி தன் கோரமுகத்தை பாரபட்சமின்றி காட்டி வருகிறது. இந்நிலையில் வறட்சியின் கோரப்பிடியில் சிக்குண்டு, ஒரே சமயத்தில் 15 குரங்குகள் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம், மத்திய பிரதேச மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மார்ச் தொடங்கி தற்போது வரை பல்வேறு மாநிலங்களில் ஆதிக்கம் செலுத்தி வரும் வெப்பத்திற்கு, பல்வேறு மனித உயிர்கள் மட்டுமல்லாமல் வன உயிரினங்களும் பலியாகி வருகின்றன. கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு தண்ணீர் பற்றாக்குறை நாடு முழுவதும் நிலவுகிறது.
நாடு முழுவதுமே வறட்சி நிலவினாலும், மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் எங்குமே இல்லாத அளவிற்கு கடும் தண்ணீர் பற்றாக்குறை காணப்படுகிறது. இதனையடுத்து நிலைமைய சமாளிக்க மத்திய பிரதேச மாநிலத்தில், குடிநீரை பயன்படுத்தவே கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ராஜன் செல்லப்பாவின் கருத்து அ.தி.மு.க.வில் சலசலப்பை உருவாக்கும்... அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
நாடு முழுவதுமுள்ள 91 முக்கிய அணைகளில் 20 சதவீத தண்ணீரே எஞ்சியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வறட்சி காரணமாக தண்ணீரின்றி நாட்டில் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி கொண்டே செல்லும் நிலையில், மத்திய பிரதேச மாநில வனப்பகுதிகளில் தண்ணீர் இல்லாததன் காரணமாக ஒரே சமயத்தில் 15 குரங்குகள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள திவாஸ் நகரில் ஜோஷி பாபா வனப்பகுதி உள்ளது. இங்கு பல விலங்குகள் வசித்து வருகின்றன. கடந்த சில மாதங்களாக நிலவி வரும் தண்ணீர் பற்றாக்குறையானது, மனிதர்களை மட்டுமின்றி வன விலங்குகளையும் விட்டு வைக்கவில்லை.
இதனால் போதிய தண்ணீர் கிடைக்காமல் சுட்டெரித்த வெயிலுக்கு சுருண்டு விழுந்து, சுமார் 15 குரங்குகள் வரை உயிரிழந்துள்ளன. ஜோஷி பாபா வனப்பகுதியில் ஆடு மேய்க்க சென்ற சிறுவனும், சில கிராமத்தினர்களும் குரங்குகள் ஆங்காங்கே இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து வனத்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.
வனத்துறையினர் விரைந்து வந்து பார்த்த போது குகைக்குள் 8 குரங்குகளும், மற்ற குரங்குகள் குகைக்கு வெளியிலும் இறந்து கிடந்துள்ளன. இதனை பார்த்து அதிகாரிகளும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் குரங்குகளின் உடலை கைப்பற்றி, மருத்துவர்களை வைத்து பிரேத பரிசோதனை நடத்தினர்.
முடிவில் உயிரிழந்த அத்தனை குரங்குகளுமே வறட்சி காரணமாக தண்ணீர் பருக வழியின்றி, வெயிலின் தாக்கத்தினால் பரிதாபமாக உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ளது. இது பற்றி பேசிய வனத்துறை அதிகாரி ஒருவர், ஜோஷி பாபா வனத்தில் 5 அல்லது 6 குழுக்களாக குரங்குகள் வசித்து வந்துள்ளன.
நீர் தட்டுப்பாடு காரணமாக சில பெரிய குரங்குகள் கொஞ்சம் தண்ணீர் மட்டுமே எஞ்சியுள்ள நீர் நிலைகளை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றன. அவை மற்ற சிறிய குரங்குகளை நீரை குடிக்க விடாமல் தாக்கி அச்சுறுத்தி விரட்டியுள்ளன. இதனால் குடிப்பதற்கு தண்ணீர் கிடைக்காமல் சிறிய குரங்குகள் வெயில் தாங்காமல் சுருண்டு விழுந்து இறந்துள்ளன என கூறியுள்ளார்.