டெல்லியில் 150 ஆண்டு பழமை வாய்ந்த குடியிருப்பு கட்டிடம் இடிந்து விபத்து: அப்பா, மகன் பலி
டெல்லி: வடக்கு டெல்லியில் 150 ஆண்டு பழமை வாய்ந்த 3 அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் திடீர் என்று இன்று காலை இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி அப்பா, மகன் ஆகிய 2 பேர் பலியாகினர்.
வடக்கு டெல்லியில் உள்ள பாரா இந்து ராவ் பகுதி அருகே 150 ஆண்டு பழமை வாய்ந்த 3 அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று இருந்தது. அந்த கட்டிடம் இன்று காலை 7 மணி அளவில் திடீர் என்று இடிந்து விழுந்தது.
அப்போது அந்த கட்டிடத்தில் 60 வயதான நாக்கி, அவரது மகன்கள் பன்ட்டி(35) மற்றும் சல்மான்(28) ஆகியோர் இருந்தனர். இடிபாடுகளில் சிக்கி காயமைடந்த சல்மான் மற்றும் பன்ட்டி மீட்கப்பட்டு அருகில் உள்ள பாரா இந்து ராவ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் நாக்கி இடிபாடுகளில் இருந்து மீட்கப்படும் முன்பு இறந்துவிட்டார். நாக்கி சதார் பஜாரில் நகைக் கடை வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பன்ட்டி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இறந்தார். கட்டிடம் இடிந்தபோது அதில் குடியிருந்த மற்றொருவர் வெளியே சென்றதால் உயிர் பிழைத்தார்.
இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் ஒருவர் கூறுகையில்,
கட்டிடம் இடிந்து விழும் சத்தம் கேட்டு ஓடி வந்தோம். இடிபாடுகளுக்குள் இருந்து சல்மான் என்பவரை மீட்டோம். இடிபாடுகளை போலீசாரும், பொதுமக்களும் சேர்ந்து அகற்றி வருகின்றனர் என்றார்.