கொள்ளையர்களை நோக்கி.. பாயும் புலியாக மாறிய சிறுவன்.. திரில் சம்பவம்
அப்பாவை காப்பாற்ற 16 வயது மகன் துணிச்சலான காரியத்தில் ஈடுபட்டான்.
டெல்லி: இளம் கன்று பயமறியதுதான்.. ஆனால் கூடவே பாசமும், அன்பும் சேர்ந்துவிட்டால் துணிச்சலின் அளவு உச்சத்துக்கு சென்றுவிடும் என்பதற்கு உதாரணம்தான் இந்த சம்பவம்.
வடமேற்கு டெல்லி, ரோஹினி செக்டார் என்ற இடத்தில் முனிஷ்குமார் என்பவர் கடை வைத்திருக்கிறார். இந்த கடையில் பால் பொருட்கள் சம்பந்தப்பட்ட பொருட்களை விற்பனை செய்து வருகிறார். இவருக்கு 16 வயதில் ஒரு மகன் உள்ளான். அவன் பெயர் சன்னி. ரொம்ப துடுக்கு. அதி புத்திசாலி... சன்னிக்கு அப்பாமீது கொள்ளை பிரியம்.
பைக்கில் கிளம்பினர்
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை, கடையில் வசூலான மூன்றரை லட்ச ரூபாயை பேங்கில் போடலாம் என்று அப்பாவும், மகனும் கிளம்பினார்கள். ஒரு பையில் அந்த பணத்தை போட்டுக் கொண்டு, பைக்கில் மகனையும் உட்கார வைத்து புறப்பட்டார் முனிஷ்.
துப்பாக்கி முனையில் கொள்ளை
அப்போது ஹெல்மெட் கொள்ளையர்கள் 2 பேர் பைக்கில் திடீரென முனிஷ்குமாரை வழிமறித்து வம்பிழுத்தனர். பிறகு தேவையில்லாமல் எதை எதையோ பேசி வாக்குவாதம் செய்தனர். பின்னர் படாரென தங்கள் பாக்கெட்டிலிருந்து துப்பாக்கியை எடுத்து கொண்டு, பணத்தை தருமாறு முனிஷை மிரட்டினர். கடைசியில் பணப்பையை பறித்து கொண்டு பைக்கில் பறந்தனர்.
துப்பாக்கியால் சுட்டனர்
இரு கொள்ளையர்களும் பைக்கில் தப்பிப்பதை பார்த்த மகன் சன்னி பின்னாலேயே அவர்களை விரட்டி சென்றான். அந்த நேரம் பார்த்து கொள்ளையர்களின் பைக் சொதப்பி விட்டது... இதனால் நிலைதடுமாறி கவிழ்ந்து இருவரும் பொத்தென்று விழுந்தார்கள். கொள்ளையர்களை நெருங்கிவிட்ட சன்னி அதில் ஒருவரை கெட்டியாக பிடித்து கொண்டான். இதனை பார்த்த மற்றொரு கொள்ளையனோ, கையிலிருந்த துப்பாக்கியால் சன்னியை நோக்கி சுட்டார். அடிவயிற்றில் துப்பாக்கி குண்டு பட்டு சன்னி கீழே படுகாயமடைந்து சரிந்தான்.
சொதப்பிய பைக்
அதற்குள் முனிஷ்குமார் சம்பவ இடத்துக்கு வந்துவிட்டார். கொள்ளையர்களை பிடிக்க முயன்றார். ஆனால் அவர்கள் மிளகாய் பொடியை முனிஷ் முகத்தில் அள்ளி வீசிவிட்டு தப்பித்து செல்ல பைக்கை எடுத்தார்கள். ஆனால் அந்த பைக் இப்போதும் அவர்களை சொதப்பி விட்டுவிட்டது. ஸ்டார்ட் ஆகவே இல்லை. உதை உதையென்று பைக்கை உதைத்து கொண்டிருந்தார்கள் திருடர்கள்.
மீண்டும் முயற்சி
இந்த நேரத்தில், இதனால் குண்டடி பட்ட சன்னி ரத்த காயத்துடன் தட்டு தடுமாறி எழுந்து நின்றான். அதேபோல முகம் நிறைய அப்பி இருந்த மிளகாய் பொடியை அரைகுறையாக துடைத்தெறிந்தார் முனிஷ். இப்போது தந்தையும் - மகனும் மீண்டும் கொள்ளையர்களை பிடிக்க முயன்றனர். அதில் ஒருவரை பிடித்தும் விட்டார்கள். ஆனால் பணத்துடன் மற்றொரு கொள்ளையன் தப்பிவிட்டான். பைக் அப்போதுதான் ஸ்டார்ட் ஆனது.
ஒருவர் கைது
தகவலறிந்து போலீசார் விரைந்து சென்று ஒரு கொள்ளையரை கைது செய்தனர். தப்பி ஓடிய மற்றொருவர் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவராம். அதனால் போலீசார் அவரை தேடி விரைந்துள்ளனர்.
சன்னிக்கு ஆபரேஷன்
துப்பாக்கி குண்டடிப்பட்ட சன்னியை ஜெய்ப்பூர் கோல்டன் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சன்னிக்கு ஆபரேஷன் செய்ப்பட்டது. தந்தைக்காக 16 வயது மகன் செய்த துணிச்சலான காரியம்தான் அந்த மாநிலத்தில் பரபரப்பாகவும், பாராட்டியும் பேசப்பட்டு வருகிறது.