நாக்பூரில் பலாத்கார குற்றவாளிக்கு ஜாமீன்.. பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமி தற்கொலை
நாக்பூர்: மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் பாலியல் பலாத்கார குற்றவாளி ஜாமீனில் வெளியே வந்ததால் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை அடுத்த ஜாரிபட்கா பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. தாயை இழந்த இவர் தனது தந்தை, அவரது 2 மனைவி, சகோதரனுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் சிறுமி கடந்த ஜூன் மாதம் தனது மாற்றான் தாயின் உறவினர் ஒருவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதையடுத்து சிறுமியின் புகாரின் பேரில் அந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
அவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் அவர் அண்மையில் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார். இதை கேள்விப்பட்ட அந்த சிறுமி நீண்ட நாட்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த புதன்கிழமை மிகுந்த மனஉளைச்சலில் சிக்கித் தவித்த அந்த சிறுமி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து தகவலறிந்த போலீஸார் அங்கு வந்து விசாரணை நடத்தி சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அண்மைக்காலமாக சிறுமிகள், பெண்கள் மீதான பாலியல் பலாத்கார சம்பவங்களும் பாலியல் அத்துமீறல்களும் நடந்த வண்ணம் உள்ளன. இந்த சம்பவத்தில் பாதிக்கப்படும் பெண்கள், சிறுமிகளின் புகாரை வைத்து போலீஸார் குற்றவாளிகளை கைது செய்கிறார்கள். பின்னர் சில நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டு அவர்கள் ஜாமீன் மனுவை தாக்கல் செய்து வெளியே வந்துவிடுகிறார்கள்.
இது போன்ற பாலியல் சம்பவங்களில் குற்றவாளிகளுக்கு ஜாமீன் கொடுப்பதை விட குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு வழக்கை விரைந்து முடித்து உரிய தண்டனையை அளிக்க வேண்டும் என்பதே மாதர் சங்கங்கள், பெண்கள் அமைப்பின் கோரிக்கையாக உள்ளது. தண்டனைகள் கடுமையாக்கப்பட்டால் மட்டுமே குற்றங்கள் குறையும் என்பதற்கேற்ப பாலியல் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்கிறார்கள்.
பாலியல் குற்றவாளிகள் அந்த குற்றத்தில் ஈடுபட்டது உறுதியானதும் அவர்கள் ஜாமீனில் வெளியே வர முடியாத அளவுக்கு வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுகிறது. தண்டனை கொடுப்பது ஒரு புறம் இருந்தாலும் திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்ற பாடலுக்கேற்ப பெண்களையும் சிறுமிகளையும் நம் வீட்டு பெண்களாகவும் நம் வீட்டு பிள்ளைகளாகவும் நினைக்கும் மனப்போக்கு வந்தால் மட்டுமே இது போன்ற அவலங்கள் ஒழியும்.
வேலியே பயிரை மேய்ந்த கதையாக மாற்றான் தாயின் உறவினரே சிறுமியை பலாத்காரம் செய்தது, தந்தையே மகளை பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்குவது, பெண் பிள்ளையை தனது கள்ளக்காதலனே பாலியல் துன்புறுத்தல் செய்ய தாய் உடந்தையாக இருப்பது உள்ளிட்ட ஏராளமான சம்பவங்கள் நடந்து வருவது பெண்கள், சிறுமிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துகிறது. இது போன்ற சம்பவங்களால் அவர்களது முன்னேற்றங்களும் வளர்ச்சியும் தடைபடுகிறது.