2 ஆண்டுகளில் போலீசார் உள்பட 113 பேரால் 16 வயது சிறுமி பலாத்காரம்
புனே: மேற்கு வங்கத்தை சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த 2 ஆண்டுகளாக போலீசார் உள்பட 113 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சிலிகுரியை சேர்ந்தவர் ரீமா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). 16 வயது ரீமாவின் தந்தை அவர்களை விட்டுவிட்டு ஓடிவிட்டார். இதையடுத்து ரீமாவின் தாய் மனநலம் பாதிக்கப்பட்டார். ரீமாவின் பாட்டி டீக்கடை நடத்தி வருகிறார்.
அவரது டீக்கடைக்கு சிகரெட் வாங்க வந்த நேபாளத்தை சேர்ந்த ரோஹித் பந்தாரி(35) என்பவர் ரீமாவை பார்த்துவிட்டு அவருக்கு மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் அழகு நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாக தெரிவித்துள்ளார்.
இதை நம்பி புனே கிளம்பிய ரீமாவை பந்தாரி பாலியல் பலாத்காரம் செய்தார். ரீமாவுக்கு போதைப்பொருள் கொடுத்து அவரை பலர் பலாத்காரம் செய்ய உதவினார். இதையடுத்து அவர் ரீமாவை விபச்சாரத்தில் தள்ளினார். கர்ப்பமாகிய ரீமாவை கட்டாயப்படுத்தி கருவை கலைக்க வைத்தார். பந்தாரியின் கூட்டாளியான ஸ்விக்ரிதி காரேல்(26) ரீமாவை ஹைதராபாத், அகமதாபாத் மற்றும் போபாலுக்கு அழைத்துச் சென்று பலருக்கு விருந்தாக்கியுள்ளார்.
மீண்டும் புனேவுக்கு அழைத்து வரப்பட்ட ரீமா ஒரு ஃபிளாட்டில் அடைத்து வைக்கப்பட்டார். இந்நிலையில் பந்தாரி, ஸ்விக்ரிதி உள்ளிட்டோர் டெல்லியை சேர்ந்த 24 வயது மாடல் அழகிக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி அவரை படுக்கைக்கு அழைக்க அவர் மறுத்துள்ளார். இதையடுத்து அந்த மாடல் அழகிக்கு சிகரெட்டால் சூடு வைத்து அவரையும் சிறுமி இருந்த ஃபிளாட்டில் பூட்டி வைத்தனர்.
அழகு நிலையத்திற்கு செல்வதாகக் கூறி மாடலும், சிறுமியும் அங்கிருந்து தப்பி டெல்லிக்கு ஓடினர். டெல்லியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாடலை பார்த்த மருத்துவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த டெல்லி போலீசார் புனே காவல் நிலையத்திற்கு அந்த வழக்கை மாற்றினர். இதையடுத்து புனே போலீசார் பந்தாரி, ஸ்விக்ரிதி உள்பட 5 பேரை கைது செய்தனர்.
5 பேரும் நேபாளத்தை சேர்ந்தவர்கள். இதற்கிடையே ரீமா டெல்லி போலீசில் பந்தாரி மீது புகார் அளித்தார். கடந்த 2 ஆண்டுகளில் தன்னை போலீசார் உள்பட 113 பேர் பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து போலீசார் 113 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.