கேரளா அமைச்சர்களில் 5 பேர் கோடீஸ்வரர்கள்...17 பேர் மீது கிரிமினல் வழக்குகள்
திருவனந்தபுரம்: கேரளாவின் 19 அமைச்சர்களில் 17 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. 5 பேர் கோடீஸ்வர அமைச்சர்கள் என ஜனநாயக சீரமைப்புக்கான இயக்கம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளா சட்டசபை தேர்தலில் இடதுசாரிகள் கூட்டணி வென்று பிணராயி விஜயன் முதல்வராகப் பதவியேற்றுள்ளார். அவருடன் 19 அமைச்சர்களும் பதவி ஏற்றனர்.
2 இளைஞர்கள்
இந்த அமைச்சர்கள் தொடர்பாக ஜனநாயக சீரமைப்புக்கான இயக்கம் வெளியிட்டுள்ள விவரங்கள்: அமைச்சரவையில் இளைஞர்கள் அதாவது 40-50 வயதுக்குட்பட்டவர்கள் 2 பேர். 51 வயது முதல் 70 வயதுக்குட்பட்டோர் 15 பேர். 70 வயதுக்கு மேற்பட்டோர் 2 பேர்
கிரிமினல் வழக்குகள்
அமைச்சரவையில் 2 பெண்களுக்கு மட்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 5 பேர்தான் கோடீஸ்வரர்கள். மொத்தம் உள்ள 19 அமைச்சர்களில் 17 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
ரூ2.36 கோடி சொத்து
அமைச்சர் தரூர் ஏ.கே. பாலன் அதிகபட்சமாக ரூ2.36 கோடி சொத்து மதிப்பு கொண்டவர். அமைச்சர்கள் ஏ.கே. சசீந்தரன், மாத்யூ தாமஸ் ஆகியோரின் சொத்து மதிப்புகள் ரூ1.44 கோடி, ரூ 1.15 கோடி.
ரூ18.67 லட்சம் சொத்து
மிகக் குறைவான சொத்து வைத்திருக்கும் அமைச்சர் தாமஸ் ஐசக். அவரது சொத்து மதிப்பு ரூ18.67 லட்சம். அமைச்சர்கள் சந்திரசேகரன் ரூ20.43 லட்சம், வி.எஸ். சுனில்குமார் ரூ25.24 லட்சம் மதிப்பிலான சொத்துகளை வைத்திருக்கின்றனர்.