மும்பை-புனே எக்ஸ்பிரஸ்வேயில் 2 கார்கள் மீது பஸ் மோதி பயங்கர விபத்து: 17 பேர் பலி, 35 பேர் காயம்
மும்பை: மும்பை-புனே எக்ஸ்பிரஸ்வேயில் தனியார் சொகுசு பேருந்து ஒன்று சாலையோரம் நின்று கொண்டிருந்த 2 கார்கள் மீது மோதி 20 அடி ஆழ பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 17 பேர் பலியாகினர், 35 பேர் காயம் அடைந்தனர்.
தனியார் சொகுசு பேருந்து ஒன்று மகாராஷ்டிரா மாநிலம் சதாரா நகரில் இருந்து மும்பைக்கு கிளம்பியது. பேருந்து இன்று காலை 5.30 மணிக்கு மும்பை-புனே எக்ஸ்பிரஸ்வேயில் சென்று கொண்டிருந்தது.
அப்போது அந்த பேருந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த இன்னோவா மற்றும் ஸ்விப்ட் கார்கள் மீது பயங்கரமாக மோதி 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 10 பெண்கள், 6 ஆண்கள், 6 மாத குழந்தை என மொத்தம் 17 பேர் பலியாகினர். மேலும் 35 பேர் காயம் அடைந்தனர்.
ரைகட் மாவட்டத்தில் உள்ள ஷிவ்கர் கிராமம் அருகே நடந்த இந்த கோர விபத்தில் காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயம் அடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
மாருதி ஸ்விப்ட் காரின் டயர் பழுதானதால் அதன் டிரைவர் வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு டயரை மாற்றினார். இந்நிலையில் அந்த வழியாக இன்னோவா காரில் வந்த டிரைவர் ஒருவர் வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு வந்து ஸ்விப்ட் காரின் டயரை மாற்ற உதவினார். அப்போது தான் பேருந்து வந்து அந்த 2 கார்கள் மீதும் மோதியது.
கடந்த வெள்ளிக்கிழமை தமிழகத்தில் உள்ள கிருஷ்ணகிரியில் நடந்த சாலை விபத்தில் சிக்கி 17 பேர் பலியான நிலையில் இன்று இந்த கோர விபத்து நடந்துள்ளது.