காணாமல் போன 17 இந்தியர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் இணைந்தனர்?
டெல்லி: உலகின் மிக கொடூரமான தீவிரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ்., இந்திய இளைஞர்களை சேர்ப்பதில் மும்முரம் காட்டிவருகிறது. இந்தியாவில் காணாமல் போன 17 இளைஞர்கள் இந்த இயக்கத்தில் இணைந்திருக்கலா என அச்சம் தெரிவிக்கப்படுகிறது.
ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் விஸ்வரூபமானது இந்திய துணைக் கண்டத்தை எட்டியிருக்கிறது. ஜம்மு காஷ்மீரிலும் தமிழகத்திலும் கர்நாடகாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் கொடிகள் பறக்கவிடப்பட்ட போதே உளவுத்துறை கடுமையாக எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதன் பின்னர் மகாராஷ்டிராவின் தானே பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிரியா சென்று அந்த இயக்கத்தில் இணைந்திருந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பின்னர் இவர்களில் ஆரீப் என்பவர் மீட்கப்பட்டு இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டார்.
தற்போதும் ஜம்மு காஷ்மீரத்தில் அவ்வப்போது ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் கொடிகள் பறக்கவிடப்படுவது உளவுத்துறையினரை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. உள்துறை அமைச்சகம் அண்மையில் 12 மாநில டி.ஜி.பி.க்கள் மற்றும் உள்துறை செயலாளர்களுடன் முக்கிய ஆலோசனையை நடத்தியது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உளவு அமைப்புகள் கண்காணித்து வரும் இளைஞர்கள், ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் இணைய வாய்ப்பு இருக்கிறது; அல்லது அந்த இயக்கத்துக்கான வலிமையான தளத்தை இந்தியாவில் அமைப்பதற்கான சாத்தியம் இருக்கிறது என்று கூறி விவாதித்திருக்கிறது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கூட ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினால் இந்தியாவுக்கு ஆபத்து இருப்பது என்பதை ஒதுக்கிவிட முடியாது என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. தற்போது 17 இந்திய இளைஞர்கள் காணாமல் போயுள்ளனர். இவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்திலோ அல்லது அதற்கு எதிரான ஜபால் அல் நுஸ்ரா இயக்கத்திலோ இணைந்திருக்கக் கூடும் என்றே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உளவு அமைப்பின் தகவல்கள் கூறுகின்றன என்பதும் டெல்லி ஆலோசனைக் கூட்டத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
மேலும் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த பலரும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் இணைந்திருக்கக் கூடும் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. ஏற்கெனவே இந்த இயக்கத்தின் 22 பேர் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் இணைய முயற்சித்த போது போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தி உள்ளனர்.
இந்திய இளைஞர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் பக்கம் சாயாமல் இருப்பதற்காகவே அனைத்து மாநில அரசுகளையும் தொடர்ந்து மத்திய அரசு உஷார்படுத்தி வருவதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.