ஈராக்: போர்க்களத்தில் சிக்கிய மேலும் 17 இந்தியர்கள் மீட்பு! 46 செவிலியர்கள் நலம்: மத்திய அரசு தகவல்
டெல்லி: ஈராக் போர்க்களத்தில் சிக்கித் தவித்த மேலும் 17 இந்தியர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பாக தலைநகர் பாக்தாத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் சையத் அக்பருதீன் தெரிவித்துள்ளார்.
ஈராக்கில் சன்னி முஸ்லிம்களின் ஆயுத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். பல நகரங்களைக் கைப்பற்றிய கையோடு ஷரியத் சட்டங்களை அமல்படுத்தியுள்ளது. இந்த நகரங்களில் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் சிக்கியுள்ளனர்.
இவர்களை பாதுகாப்பாக மீட்பதற்காக ஈராக்குக்கு முன்னாள் தூதர் சுரேஷ் ரெட்டி, இந்தியாவின் சிறப்பு தூதுவராக அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் தடை செய்யப்பட்ட சதாம் உசேனின் பாத் கட்சி தலைவர்கள் இருப்பதால் அவர்கள் மூலமாக தொடர்பு கொண்டு இந்தியர்களை மீட்கும் பணியும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அக்பருதீன் கூறியதாவது:
போர்க்களத்தில் சிக்கிய மேலும் 17 இந்தியர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பாக தலைநகர் பாக்தாத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்.
திக்ரீத் நகரில் சிக்கிய 46 இந்திய செவிலியர்களும் பாதுகாப்பாக இருக்கின்றனர். அவர்களுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம்.
அத்துடன் தீவிரவாதிகளாள் கடத்தப்பட்ட 39 இந்தியர்களும் நலமாக இருக்கின்றனர். மேலும் இந்தியர்கள் தொடர்பு கொள்வதற்காக நஜாப், கர்பாலா, பஸ்ராவில் 24 மணி நேர உதவி மையங்கள் அமைக்கப்படும்.
ஈராக்கில் இருந்து வெளியேற விரும்பும் இந்தியர்கள் நாடு திரும்ப விமான ஏற்பாடுகள் செய்து தரப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அக்பருதீன் கூறினார்.