ராணுவ பயிற்சி முகாமில் திடீர் வெடி விபத்து... 18 வீரர்கள் படுகாயம்... 7 வீரர்கள் கவலைக்கிடம்
ஜம்மு : புல்வாமா மாவட்டத்தில் உள்ள ராணுவ பயிற்சி முகாமில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 18 வீரர்கள் படுகாயமடைந்தனர். அவர்களில் 7 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திப்போரா ராணுவ பயிற்சி முகாமில் நேற்று (சனிக்கிழமை) வழக்கம் போல் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
வெடிகுண்டுகளை வைத்து பயிற்சி மேற்கொண்ட போது, அதில் ஒரு குண்டு திடீரென வெடித்தது. இதில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 18 வீரர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் 7 வீரர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் ஜோஷி கூறினார்.
வெடிகுண்டுகளை வைத்து மேற்கொண்ட பயிற்சியின்போது நடந்த எதிர்பாராத விபத்து இது எனவும் அவர் தெரிவித்தார்.
ஆனால் விபத்துக்கான காரணம் குறித்த உடனடியாக முடிவுக்கு வரமுடியவில்லை என்றும் அவர் கூறினார்.
மேலும் இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.